Saturday, January 29, 2011

ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாண் மீதும் வழக்கு பதிவு

ஆதர்ஷ் வீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்ட 13 பேர்கள் மீது மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

கார்கில் போரில் மரணமடைந்த மற்றும் பங்கேற்ற இராணுவ வீரர்களுக்காக,மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

முதல்வராக இருந்த அசோக் சவாண் தனது உறவினர்களுக்கு வீடு ஒதுக்கியதாக எழுந்த புகார் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது.

மேலும் பல்வேறு இராணுவ உயரதிகாரிகள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த நவம்பர் மாதமே வழக்குப் பதிவு செய்த போதிலும்,விசாரணை மந்த கதியிலேயே இருந்ததோடு, இந்த ஊழல் தொடர்பாக யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கடந்தவாரம் சிபிஐ-யின் இந்த மெத்தன போக்கு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து,இவ்வழக்கில் அசோக் சவாண் மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்தது.

சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment