Friday, March 11, 2011

மணிப்பூரில் பிரதீபாபட்டீல் தங்கியிருந்த இடம் அருகே குண்டு வெடிப்பு

மணிப்பூரில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் தங்கி யிருந்த இடம் அருகே குண்டு வெடித்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மணிப்பூர் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். அங்கு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். நேற்று இரவு 11 மணிக்கு கவர்னர் மாளிகை அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்தசிங் அகாடமி என்ற இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதனால் அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் இல்லை. ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மாநிலத்தில் 40 மணி நேர முழு அடைப்புக்கு மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது.

இதற்கு மக்களிடம் ஓரளவே ஆதரவு இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இன்று மந்திரிபுரி என்ற இடத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவை அமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு டெல்லி திரும்புகிறார். குண்டு வெடிப்பை தொடர்ந்து ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment