Saturday, April 9, 2011

டெல்லியில் நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிந்து வருபவர் சச்சின். இவரது மனைவி சித்ரா ராகவ். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சித்ராவுக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட சச்சின் முடிவு செய்தார்.

நேற்று காலை 7.15 மணிக்கு அவர் சித்ராவை ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றார். விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த கணவர் சச்சினிடம் இதுபற்றி சித்ரா கூறினார். ஆனால் பிரசவத்துக்கு டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், இது சாதாரண வலியாகத்தான் இருக்கும். பயப்பட தேவையில்லை என்று சச்சின், சித்ராவுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

8.30 மணியளவில் சித்ராவுக்கு தாங்க முடியாதபடி பிரசவ வலி ஏற்பட்டது. கதறி துடித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் மைதி-அர்பிதா என்ற டாக்டர் தம்பதிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் யோசனைப்படி விமானத்தில் வால் பகுதிக்கு சித்ரா அழைத்து செல்லப்பட்டார். அங்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சித்ராவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. டாக்டர் அர்பிதா எந்த கருவிகளும் இல்லாத நிலையில், தன் அனுபவத்தை வைத்து ஒரு பிளேடு மற்றும் ஒரு ரப்பர் பேண்ட் உதவியுடன் பிரசவத்தை நடத்தி முடித்தார்.

அதனால் சித்ரா சிக்கிலின்றி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மற்ற பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். காலை 9.30 மணிக்கு அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. நடுவானில் விமானத்தில் குழந்தை பிறந்துள்ள தகவல் ஏற்கனவே டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆம்புலன்ஸ் வண்டியுடன் தயாராக நின்றனர். 9.30 மணிக்கு விமானம் தரை இறங்கியதும் சித்ராவையும், அவரது பெண் குழந்தையையும் டாக்டர்கள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment