background img

புதிய வரவு

30+30+30: இது ராகுலின் 'காந்தி' கணக்கு!

ஆளாளுக்கு குண்டக்க மண்டக்க சீட் கேட்க ஆரம்பித்துள்ளனராம் திமுக கூட்டணியில், குறிப்பாக காங்கிரஸ் தனது பலத்திற்கு முற்றிலும் நேர் மாறான தொகுதிகளை கேட்கிறதாம். இருந்தாலும் திமுக தனது நிலையிலிருந்து சற்றும் தளர்ச்சி அடையாமல் தங்களால் இவ்வளவுதான் முடியம் என்று கூறி வருகிறதாம்.

ராசா என்ற ஒரு பெரும் சிக்கலை கையில் வைத்துக் கொண்டு திமுகவை ஏகத்திற்கும் நெருக்கி வருகிறது காங்கிரஸ். கிட்டத்தட்ட பிளாக்மெயிலில் இறங்கியுள்ளது. ராசா கைது செய்யப்பட்டுள்ளதை தனது அரசியல் பேரத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ள காங்கிரஸ் தனது பலத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத வகையில் சீட் கேட்டுள்ளதாம்.

ஆரம்பத்தில் 100 தொகுதிகள் கேட்போம் என்று இளங்கோவன் அன்ட் கோ பேசி வந்தனர். பின்னர் 83 தொகுதிகளை கேட்டுள்ளாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், 78 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி கூட குறைச்சலாக தந்தால் ஏற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியிருப்பதாக தகவல்கள் கூறின.

இந்த நிலையில் ராகுல் காந்தி ஒரு கணக்கைப் போட்டு அதை திமுக தரப்பிடம் நீட்டியுள்ளாராம். அதன்படி மொத்தம் 90 தொகுதிகளைக் கேட்டுள்ளதாம் காங்கிரஸ்.
இதுவரை காங்கிரஸ் தரப்பில் யோசித்து வைக்கப்பட்டிருந்த, திமுக தரப்பிடம் கொடுக்கப்பட்டிருந்த பட்டியலை மொத்தமாக நிராகரித்து விட்டாராம் பீகாரில் காங்கிரஸ் கட்சி பெரிய லெவலுக்கு மண்ணைக் கவ்வ உதவிய ராகுல் காந்தி.

இப்போது அவர் தயாரித்துள்ள பட்டியல் சற்றே வித்தியாசமானது மட்டுமல்லாமல் விசித்திரமாகவும் உள்ளது. திமுக அல்லது அதிமுக என்ற குதிரையில் ஏறாமல் ஒரு போதும் கிளம்பிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்த வரலாறு காங்கிரஸிடம் இல்லை. இருந்தாலும் எல்லாம் எங்களால்தான் என்பது போல பில்டப் செய்வதில், பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸுக்கு நிகர் காங்கிரஸ்தான்.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் 'ஏ', 'பி' மற்றும் 'சி' என ரகம் பிரித்து 90 தொகுதிகளைப் பொறுக்கி எடுத்துள்ளாராம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ஒவ்வொரு ரகத்திலும் தலா 30 தொகுதிகள் என்ற ரீதியில் இந்த 90 தொகுதிகளாம்.

இதில் 'ஏ' என்ற ரகம் என்னவென்றால், உறுதியாக காங்கிரஸ் வெல்லும் தொகுதிகளாம் (அது எந்தத் தொகுதிகளோ!). 'பி' என்பது கூட்டணியோடு சேர்ந்து அதாவது கூட்டணியின் பலத்தைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெல்லக் கூடியது. 'சி' என்பது சந்தேகக் கேஸ், இருந்தாலும் வாய்ப்பு இருக்கிறது என்ற ரகத்தில் சேரக் கூடியது.

இதில் 'ஏ' ரக தொகுதிகள் கட்டாயம் காங்கிரசுக்கு தரப்பட வேண்டுமாம், ஒரு தொகுதியைக் குறைத்தால் கூட ஏற்க மாட்டார்களாம். 'பி' ரக தொகுதிகளிலும் கூட அட்ஜெஸ்ட்மென்ட் கிடையாதாம். 'சி' ரகத்தில் வேண்டுமானால் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வாய்ப்பு தருவார்களாம்.

ஆனால் இந்திரா காந்தி போன்ற கில்லாடிகளையே பார்த்தவராயிற்றே கருணாநிதி, ராகுல் காந்திக்கா அவர் பயந்து போய் விடுவார். அதற்கேற்ப திமுக தரப்பும் தெளிவாகவும், ஸ்டெடியாகவும் உள்ளதாம்.

கடந்த முறை 45 தொகுதிகள் கொடுத்தோம். இந்த வேண்டுமானால் 50 தரலாம். ரொம்ப வேண்டும் என்றால் 60 தொகுதிகள் வரை போகலாம். அதற்கு மேல் சரிப்படாது. ராசா விவகாரம் வேறு, இது வேறு என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளாராம் திமுக தரப்பிலிருந்து.

தற்போது இந்த 90 தொகுதிகளைத் தேர்வு செய்யும் வேலையை ஜி.கே.வாசன் கோஷ்டியிலிருந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யுவராஜா தலைமையிலான குழுவிடம் ராகுல் காந்தி ஒப்படைத்துள்ளாராம்.

இந்தக் குழுதான் தொகுதிகளைத் தேர்வு செய்து கொடுக்கவுள்ளதாம். அதன் பின்னர் அதை ராகுல் பரிசீலித்து திமுக தரப்பிடம் அளிக்க காங்கிரஸைக் கேட்டுக் கொள்வாராம்.

பாமகவை வைத்து காங்கிரஸுக்கும் ஆப்படித்து, பாமகவுக்கும் செக் வைக்க முயன்றார் கருணாநிதி. ஆனால் சோனியா காந்தியோ, பாமகவே வேண்டாம் என்று கூறி திமுகவையே திகைக்க வைத்து விட்டார். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி மூலம் புது ரூட்டைப் போட்டு புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.

இதை சமாளிக்க உள்ளூர் தலைவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் முதல்வர் கருணாநிதி என்கிறார்கள். டெல்லியில், சோனியாவை சந்தித்து விட்டுத் திரும்பிய பின்னர் தன்னைச் சந்தித்த ப.சிதம்பரம், தங்கபாலு, ஜி.கே.வாசன் ஆகியோரிடம், காங்கிரஸ் இத்தனை தொகுதிகளை எதிர்பார்ப்பது நியாயமா என்று கேட்டாராம் முதல்வர். மேலும், இப்போது உள்ள கூட்டணியில் இன்னொரு முக்கிய கட்சியை சேர்ப்பது நல்லது. அப்படிப் பார்த்தால் பாமக அல்லது தேமுதிகவை சேர்க்க வேண்டும். தேமுதிக, திமுகவை தனது முதல் எதிரியாக அறிவித்து விட்டதால் பாமகவைத்தான் சேர்க்க வேண்டும். அதனால்தான் நான் அதை சொன்னேன் என்று கூறினாராம் முதல்வர். இதை காங்கிரஸ் தலைவர்கள் யாருமே மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் மேலிடத்தில் தற்போது ராகுல் புகுந்து உட்கார்ந்து கொண்டுள்ளதால் யாரும் எதுவும் பேச முடியாத நிலையில் நெளிந்து வருகின்றனராம்.

இதற்கிடையே, திமுகவிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச குழு அமைக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. தங்கபாலு, வாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாகியுள்ளதாம். இன்னும் 2 பேர்வேண்டும். அதில் ஒருவர் தலித்தாக இருக்க வேண்டும் எனகாங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளதாம். அதற்கேற்ற ஆளைத் தேடி வருகிறார்களாம்.

ராசாவை காங்கிரஸ் விரட்டி விரட்டி நடவடிக்கை எடுத்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள தலித் சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் தலித் உறுப்பினரைப் போடும் திட்டமாம்.

எத்தனையோ திட்டங்களை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுப் போகும் சாமர்த்தியசாலி கருணாநிதி. எனவே காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் திட்டங்களை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts