background img

புதிய வரவு

கடப்பா தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: ஜெகன்மோகன் ரெட்டி


புது தில்லி, ஜன. 2: கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

கடப்பா மக்களவைத் தொகுதி, புலிவெந்துலா பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சியை தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். எனது கவனம் முழுவதும் புதிய கட்சி தொடங்குவதில் மட்டுமே உள்ளது.

எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் மாநில அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. 2014 பேரவை பொதுத்தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த நவம்பர் 29-ல், கடப்பா மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அவரது தாயார் விஜயலட்சுமியும் தனது புலிவெந்துலா பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

புலிவெந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள அவர், கடப்பா மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்

துள்ளார்.

புதிய கட்சியின் பெயர் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது பெயரை அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் திங்கள்கிழமைமுதல் தனது "ஆறுதல் யாத்திரையை' தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த யாத்திரையின்போது விசாகப்பட்டினம் காங்கிரஸ் எம்.பி., சபம் ஹரியும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் இருந்தபோது, 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts