background img

புதிய வரவு

சாயப்பட்டறைகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு: திருப்பூர் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்; ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றில் திருப்பூரில் உள்ள சாய, சலவை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவித்து அதை தடுத்து நிறுத்துமாறு நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சாய, சலவை ஆலைகளும் 31.7.2007-க்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் சான்றிதழை பெற வேண்டும் என்றும், இந்தக் காலகட்டத்திற்குள் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து 22.10.2006 அன்று ஓர் உத்தரவினை பிறப்பித்தது.

இது மட்டுமல்லாமல் சாய மற்றும் சலவை ஆலை களில் கூடுதலாக உள்ள இயந்திரங்களை நீக்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 28.4.2008 அன்று ஓர் இடைக்கால உத்தரவினையும் பிறப்பித்தது. சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மூன்று மாத கால அவகாசத்தை அளித்து 6.10.2009 அன்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த கால அவகாசம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “ஜீரோ டிஸ்சார்ஜ்” சான்று பெறாத ஆலைகள், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து திருப்பூரில் உள்ள சுமார் 750 ஆலைகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக தங்களது இயந் திரங்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் ஆலை உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், இந்த ஆலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு தொழி லாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் பின்னலாடை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்றும், இதன் விளைவாக 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும், அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும் என்றும் இந்தத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.சென்னை உயர் நீதி மன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு முக்கியக் காரணம் அரசின் அலட்சியப்போக்கு தான். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் தூங்கிக் கொண்டிருப்பது அவர்கள் சமர்ப்பித்த மனுவிலிருந்து தெரிய வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

2006-ம் ஆண்டைய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாய, சலவை ஆலைகளைச் சேர்ந்த நிர்வாகத்தினரையும், நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தினரையும் அழைத்துப் பேசி, “ஜீரோ டிஸ்சார்ஜ்” கழிவு நீரை ஆலைகள் வெளியேற்றும் அளவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஓர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை அரசு எடுத்திருக்குமேயானால் இது போன்றதொரு சிக்கல் தற்போது ஏற்பட்டு இருக்காது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 95 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை செலுத்தியுள்ளதாக சாய, சலவை ஆலைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஆலைகளை மூட வேண்டிய அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக 19.3.2010 அன்று தி.மு.க. அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. திருப்பூர் சாய ஆலைகள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts