
''தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும்'' என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும் மறைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆவுடையப்பன், இன்று நடைபெற்றசட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் முதலமைச்சர் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் வரும் 10ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாளைய தினம் 2011-12 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அன்றைய தினமே 2011-12 ஆம் ஆண்டுக்கான செலவின முன்பண மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு விடுமுறையாகும். வரும் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடைபெறும்.
10ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று பதிலுரை வழங்கப்படும். அன்றைய தினமே 2010-11 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மேலும் 2010-11 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மானிய கோரிக்கைகளுக்கான நிதி ஒதுக்க சட்ட முன்வடிவும் அறிமுகம் செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படும். அத்துடன் 2011-12 ஆம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்குரிய சட்ட முன்வடிவும் அன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
இதுதவிர அரசினர் சட்ட முன்வடிவுகள் ஏதேனும் வந்தால் அவையும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும், ஏனைய அரசினர் அலுவல்கள் இருந்தாலும் அவையும் மேற்கொள்ளப்படும் என்று ஆவுடையப்பன் கூறினார்.
மேலவை தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தால் வாக்களிப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தொடர்பான அறிவிப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்றார்.
0 comments :
Post a Comment