background img

புதிய வரவு

நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீரழிக்கும்: பிரதமர் எச்சரிக்கை

புதுதில்லி, பிப். 4: நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீர்குலைத்துவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு நிலையில் பிரதமர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.
உலக அரங்கில் நமது நாட்டின் மீதான நன்மதிப்புக்கு ஊழல் கேடு விளைவிக்கும். நமது சொந்த மக்களிடமே நம்மை மதிப்பிழக்கச் செய்துவிடும். இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ஊழல் தான். எனவே, ஊழலுக்கு எதிராக துணிவாகவும் விரைவாகவும் முனைப்பாக போராட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. சமூக மேம்பாட்டுக்கான நமது திட்டங்களை ஊழல் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் கூறினார்.
ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக ரீதியிலும் சட்ட ரீதியிலும் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.
ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான மசோதா, மற்றொன்று ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதா. இந்த இரு மசோதாக்களோடு ஊழலை ஒழிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மரபு மீறிய செயல்களிலும் ஈடுபடுவது அதிகரித்து வருவதை சமூக பொறுப்புள்ள பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
வெளிப்படையான நிர்வாகம், போட்டியை ஊக்குவிப்பது, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.
எனவே ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் மன்மோகன்.
உள்நாட்டு பாதுகாப்பு: சில பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் பதற்றமாக உள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகள், காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது. நவீன ஆயுதங்கள் வழங்குவது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, போலீஸôருக்கு நவீன பயிற்சி என எல்லா வகையான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் அவர். இந்த விஷயத்தில் நிதி ஒரு பிரச்னையே அல்ல. தேவையான நிதியை ஒதுக்க 13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts