background img

புதிய வரவு

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ட்விட்டருக்கு தடை விதிக்க பரிசீலனை

கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ட்விட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

செல்போன் மற்றும் இணையதளங்களே இந்த வதந்தி வேகமாக பரவக் காரணம் என்பதை அறிந்த மத்திய அரசு செல்போனில் எஸ்.எஸ்.எம். அனுப்ப கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது நிலைமை சீரடைந்தபின் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக 310 இணைய தளங்கள் கண்டறியப்பட்டு அவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.

இதனையடுத்து இந்த மாநிலங்களில் ட்விட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

முன்னதாக டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தடுக்க மத்திய அரசு சைபர் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.


-விகடன் இணையதளம் 

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

முக நூல்

Popular Posts