background img

புதிய வரவு

கருணாநிதியுடன் சந்திப்பு: சேகர்பாபு தி.மு.க.வில் சேர்ந்தார்;எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

கருணாநிதியுடன் சந்திப்பு: சேகர்பாபு தி.மு.க.வில் சேர்ந்தார்;எம்.எல்.ஏ. பதவி ராஜினாமாஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு. இவர் வட சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வும் இருந்து வந்தார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ஜெயலலிதா நீக்கினார்.


சேகர்பாபு ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதோடு சேகர்பாபுவும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் அழைக்கப்பட வில்லை.


இதைத் தொடர்ந்து சேகர்பாபு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது தாய் கழகத்தில் சேரும் தங்களை வரவேற்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.


இன்று காலை 10.30 மணிக்கு சேகர்பாபு முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி தி.மு.க.வில் சேர்ந்தார்.


அவருடன் 200 தொண்டர்களும் நிர்வாகிகளும் சென்று தி.மு.க.வில் சேர்ந்தனர். அவர்களும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தினார்கள். கருணாநிதியை சந்தித்து விட்டு காலை 11.30 மணிக்கு வெளியே வந்த சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-


கேள்வி: அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து செயல்பட்ட நீங்கள் திடீர் என தி.மு.க.வுக்கு மாறியதன் காரணம் என்ன?.


பதில்:- தி.மு.க.வை பொறுத்தவரை ஒரே தலைவர் கலைஞர்தான். ஆனால் அ.தி.மு.க.வில் புரட்சி தலைவி பொது செயலாளராக இருந்தாலும் பல்வேறு பொது செயலாளர்கள் திரை மறைவில் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற யாரும் அ.தி.மு.க.வில் இருக்க முடியாது. எங்களை அந்த கட்சியில் இருந்து அவமதித்து தூக்கி வீசிய போது கூட நாங்கள் இருக்கிறோம் என இருகரம் நீட்டி அரவணைத்து தலைவர் கலைஞர் எங்களை அழைத்ததால் தி.மு.க.வில் இணைந்து இருக்கிறோம்.


கே:- வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலை எப்படி இருக்கும்?


ப:- தலைவர் கலைஞர் ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் மூலம் ஏழை எளியவர்கள் பயன் அடைந்துள்ளனர். மக்கள் நல பணிகளை முன் நிறுத்தி செயல்படும் தி.மு.க. தலைவர் கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்படுவார். தி.மு.க. மீண்டும் அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கும்.


கே:- அ.தி.மு.க.வில் இருந்து முன்னணி தலைவர்கள் பலர் தி.மு.க.வில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது நீங்களும் வந்து இருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?


ப:- தி.மு.க.வில் தொண்டர்களின் உணர்வுகளை தலைவர் கலைஞர் மதிக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கு நேர் மாறாக உள்ளது. நான் அ.தி.மு.க.வில் இருந்த போது தூய தொண்டனாக இருந்து கடுமையாக கட்சிக்கு பாடுபட்டேன். என்னை போல் நிறைய தொண்டர்கள் இரவு பகலாக கட்சிக்காக பாடுபட்டார்கள். ஆனால் எங்களை எல்லாம் தூக்கி வீசி எறிந்த நிலையில் ஆதரவு கரம் நீட்டி ஒரு தந்தை போல் எங்களை அரவணைத்தார் கலைஞர்.


கே:- வட சென்னையில் அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்தது போல், தென் சென்னை அ.தி.மு.க.விலும் இது போல் நிலை உருவாகுமா?


ப:- எங்களைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை அங்கும் உருவானால் இது போல் தொண்டர்கள் மனம் மாறுவார்கள்.


கே:- ஆர்.கே. நகர் தொகுதி மீண்டும் உங்களுக்கு கிடைக்குமா?


ப:- நான் ஏற்கனவே கூறியது போல் ஆதரவற்ற நிலையில் இருந்த எங்களுக்கு நேசக் கரம் நீட்டியவர் கலைஞர். அவர் சுட்டிக் காட்டும் திசையில் எட்டிப்பாயும் சிப்பாய்களில் ஒருவராக வந்துள்ளேன். ஆதரவு கரம் நீட்டிய தி.மு.க. தலைவருக்கு எப்போதும் விசுவாசமாக செயல்படுவோம்.


கே:- முன்னாள் அமைச்சர்கள் செல்வ கணபதி, சத்தியமூர்த்தி, முத்துசாமி போன்றவர்கள் தி.மு.க.வில் சேரும் போது மனம் குமுறி பேசினார்கள். அந்த பட்டியலில் நீங்களும் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். எனவே ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ப:-இன்று நான் தலைவர் கலைஞரை சந்தித்து பேசிய போது அவர் சொன்ன வார்த்தை வெளியே சென்றதும் உன்னிடம் நிறைய பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பார்கள். அப்போது நாகரீகமாக பேசுங்கள் அந்த அம்மையாரைப் பற்றி காரசாரமாக பேசி விடாதே என்று அறிவுரை கூறி அனுப்பினார். அந்த அளவுக்கு அவரிடம் பெருந் தன்மை உள்ளது. அவர் சொன்ன வார்த்தை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.


கே:- ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படுவீர்களா?


ப:- தலைவர் கலைஞரை சந்தித்த போது எனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தேன். கலைஞர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவேன்.


இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக தி.மு.க.வில் சேர வந்த சேகர்பாபுவை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அழைத்து வந்தார். அவர்களை வாசலில் நின்று வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. துறைமுகம் காஜா, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.


சேகர்பாபுவுடன் தி.மு.க. வில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:-


முன்னாள் கவுன்சிலர் சாவிதிரி ஸ்ரீவீரராகவன், வட சென்னை மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் நேதாஜி கணேசன், நாசர், மோகன், ஆர். நடராஜன், ஆர். செந்தில்குமார், சிவசங்கரன், கல்யாண சுந்தரம், வக்கீல் பிரிவு துணை செயலாளர் சீனிவாசன், ஆசாத், மாவட்ட இளைஞர் பாசறை துணை தலைவர் சதீஷ்,மணி முத்து குருசாமி, வில்லிவாக்கம் ஜெயலலிதா பேரவை செயலாளர் பாக்ஸர் ஜி.எஸ்.மதன், பிரசிடென்சி சி.சதீஷ் ஆட்டோ ரிச்சர்டு,


ஆர்.கே. நகர் பகுதி முன்னாள் பொருளாளர் கே.மோகன், முன்னாள் செயலாளர் ரவிராஜன், ஆனந்தன், விலசன், விஜயகுமார், சம்பத்குமார், ஏழுமலை, பெரிய வீரம்மாள் உள்பட பல நிர்வாகிகள் சேர்ந்தனர்.


இதே போல் ராயபுரம், துறைமுகம், தி.ரு.வி.க நகர், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் பலரும் சேகர்பாபுவுடன் வந்து தி.மு.க.வில் சேர்ந்தனர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts