background img

புதிய வரவு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்

சித்தர் கோவில்::

மேல்மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது.

இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி, ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை.

மேலும் அந்த நிலத்தின் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்த கோவிலை `சித்தர்பீடம்' என்று அழைத்தனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்::

பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோவில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோவிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோவிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டு தோறும் பெண்களே கோவில் விழாவை கொண்டாடுகின்றனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாதவிலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அதுபற்றியும் பெரிதுபடுத்தி பேச வேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார்.

சமூக சேவை::

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் மருத்துவக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் முதலியவை இயங்குகின்றன. பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவளிக்கப்படுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கூடம் இருக்கிறது.

இன்னல் தீர்க்கும் இருமுடி::

இருமுடி அணிவது உன் அழுக்கை நீக்கிக் கொள்ளவே! ஒன்று உன் அழுக்கு. இன்னொன்று உன் குடும்ப அழுக்கு. அந்த இரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி என்பது அன்னையின் அருள்வாக்கு. உன் அழுக்கு என்பது குடும்பத் தலைவன் ஊழ்வினை.

குடும்ப அழுக்கு என்பது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள ஊழ்வினை. ஒரு குடும்பம் அல்லல் பட பல காரணங்கள் உண்டு. அவற்றை குடும்ப அழுக்கு என்கிறாள் அன்னை. அவற்றுள் சில...

1) பிதிர் சாபம், நாக சாபம், பெண் சாபம் - இவற்றால் வரும் கஷ்டங்கள்.

2) ஏவல், பில்லி, சூனியம் காரணமாக வரும் கஷ்டங்கள்.

3) வாஸ்து முறையில் கட்டப்படாத வீட்டில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

4) தீய ஆவிகள், தீய சக்திகளின் ஆதிக்கத்தின் பிடியில் இருப்பதால் வரும் கஷடங்கள்.

5) தோஷமுள்ள மனையில் வசிப்பதால் வரும் கஷ்டங்கள்.

6) பிறர் கண் திருஷ்டியால் வரும் கஷ்டங்கள். இவையே குடும்ப அழுக்கு -இவற்றிலிருந்து விடுபடவே இருமுடி.

சித்திரா பவுர்ணமி வேள்வி::

ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பவுர்ணமியை ஒட்டி நம் சித்தர் பீடத்தில் மிகப்பெரிய அளவில் கலச விளக்கு வேள்விப் பூஜை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் இயக்கத்தாலும் மாற்றத்தாலும் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து விடுபடவும், தணித்துக் கொள்ளவும் இந்த வேள்வி நடத்தப்படுகிறது.

கோள்களின் சுழற்சியை ஒட்டித் தனிமனிதர் வாழ்விலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உலக நன்மைக்கும் இயற்கைச் சூழலை ஒழுங்குப்படுத்தவும்,தனி மனிதர்கள் கிரகங்களினால் பாதிக்கப்படுவதிலிருந்து
விடுபடவும் இவ்வேள்வி நடத்தப்படுகிறது.

எனவே இல்வேள்வியில் கலந்து கொண்டு, யாக சாம்பலைப் பெற்று செல்லுங்கள். கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

தாமரை பீடம்::

அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், `இருதய கமலம்', `நெஞ்சத்தாமரை' என்று கூறப்படுவது போல, உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் மேல் நோக்கி உள்ளன.

நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அகமனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு அமிழ்ந்து, கீழ்நோக்கி இருக்கிறது. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ் நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது.

அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்து விடாமல் அவர்களை காக்க, அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்து கொள்ளலாம். தனது இடது திருவடியை ஊன்றியிருப்பதன் மூலம் தனக்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.

சமுதாய மேம்பாட்டிற்காக::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனித சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். ஆன்மிகத்தால் தான் அமைதியும், கட்டுப்பாடும் இருக்கும். ஆன்மிக நெறி மூலமாக ஒவ்வொருவனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஐம்புலன்களை அடக்கும் தன்மையும், கட்டுப்பாடும் தேவை!

ஆதிபராசக்தி இயக்கத்தின் வழிபாடு::

பல்லாயிரம் ஆண்டுகளாகவே சக்திக்கும், சித்தர்கட்கும், பஞ்ச பூதங்கட்கும் வழிபாடு உண்டு. சக்தியையும், சித்தர்களையும், பஞ்சபூதங்களையும் வழிபடுகின்ற வழிபாடு தான் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் வழிபாடு.

அடிகளாரும்,ஆன்மிக இயக்கமும்::

அடிகளார் இல்லறத் துறவியாக இருப்பதுதான் இந்த ஆன்மிக இயக்கத்துக்கே சிறப்பு! இந்த ஆன்மிக இயக்கத்தில் நீங்கள் கணவன்-மனைவியாக இருவரும் ஈடுபடுவது தான் மிகச்சிறப்பு!.

கட்டுப்பாடு தேவை::

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு ஆன்மிக வழிதான் தேவை! அதற்கு கட்டுப்பாடு அவசியமான தேவை! ஆதிபராசக்தி இயக்கம் நல்லொழுக்கம் உள்ள ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு::

நாளைய உலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு பெருமை உண்டு. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த இயக்கம் பெண்கள் இயக்கமாக மாறும்!.

எதற்காக ஆன்மிகம்?

ஆன்மிக நெறியில் இயற்கை உண்டு, செயற்கை இல்லை. ஐம்புலன்களை அடக்கிப் பழகுவதற்கே ஆன்மிகம். ஐம்புலன்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அழுக்குள்ளவனும் வந்து சேர்வான்::

ஓடுகின்ற ஆற்றில் சாக்கடையும் வந்து கலக்கும். முதலில் அசத்தமாகத்தான் இருக்கும். ஆற்று வெள்ளத்தின் ஓட்டத்தில் சிறிதுதூரம் ஓடிச்சென்று தெளிந்து போகும். அதுபோல இந்த ஆன்மிக வெள்ளத்தில் அழுக்குள்ளவனும் வந்து விழுவான். காலப் போக்கில் தெளிவடைவான். ஆன்மிகவாதியாக மாறுவான்.

பட்டி தொட்டிகளிலெல்லாம்::

"பட்டி தொட்டிகளிலெல்லாம் பக்தி மயமாக்குவேன்''. உன்னைத் தேடி நதி வராது; நதியை நோக்கி நீ வரவேண்டும்: "மகனே! அழுக்கு உடம்பிலும் உண்டு. மனத்திலும் உண்டு, உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் நதியை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி நதி வராது. மன அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான் ஆன்மிக இயக்கத்தை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி இயக்கம் வராது.''

கலியுகத்தின் இயல்பு::

ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும். அதுதான் கலியுகத்தின் இயல்பு! நீ உன் கடமைகளை செய்து கொண்டே போ! தோல்வி வரும்! சோர்ந்து போகாதே! முடிவில் ஆன்மிகம்தான் வெல்லும்.

பழுத்து உதிர்வன உண்டு:::

"இந்த ஆன்மிக இயக்கத்தில் இலையாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பூவாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பிஞ்சாகி உதிர்வன உண்டு, காயாகி உதிர்வன உண்டு. கனியாக உதிவன உண்டு.

தொண்டர்கட்கு::

"மற்றவர்கட்கு கொடுக்காமல் வாழ்வதே பாவம்!
பகிர்ந்துண்ணும் பழக்கம் உங்கட்கு வரவேண்டும்''

"ஏற்றத்தாழ்வு இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை
இல்லாமலும் நீங்கள் தொண்டு செய்ய வேண்டும்''.

"என் பணியை நீ செய்!
உன் பணியை நான் பார்த்துக் கொள்வேன்!''

"முழுவதுமாக என்னைச் சரண் அடைந்து
ஆன்மிகத் தொண்டு செய்பவன் குடும்பம்
என பொறுப்பில் வந்து விடுகிறது.''

"என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே!
உன் மூளைக்கு அவைகள் எட்டாது.
நான் என்ன கட்டளை இடுகிறேனோ
அதன்படிச் செய்.''

"இயற்கையின் எந்த ரூபத்திலும் நான் ஆன்மிகம் வளர்ப்பேன்.
உனக்கு கொடுக்கிற வாய்ப்பையும்,
கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக்
கொண்டு ஆன்மிகத்தில்முன்னேறு.

"ஆதிபராசக்தி இயக்கத்தினால் ஏழ்மை,
வறுமை ஒழிக்கப்பட்டு வருகின்றன.''

"செவ்வாடையென்றால் ஆன்மிகம்!
ஆன்மிகம் என்றால் ஆதிபராசக்தி
மன்றங்கள்! என்ற நிலைக்கு
வருதல் வேண்டும்.
இம்மன்றங்கள் தமிழ்நாட்டையே மாற்ற வேண்டும்!.

அரசியல் தொண்டும், ஆன்மிகத் தொண்டும்::

"நீ அரசியலில் தொண்டு செய்தால், அதன் தலைவன் உன்னைக் கறிவேப்பிலையாக பயன்படுத்திக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்து விடும் நிலைமை உண்டு. தெய்வத்தை மையமாக வைத்து நீ ஆன்மிகத் தொண்டு செய்யும் போது அகங்காரம் குறைய வாய்ப்புண்டு. அதனால் ஆன்மிக முன்னேற்றம் பெற வாய்ப்பு உண்டு.

தெய்வத்துக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டு செய்பவனுக்கு ஐந்து தலைமுறைக்கு என் அருள் உண்டு. அந்த அருள் உன் பேரன் பேத்திகட்கும் சென்று பயன் தருவது. அழுக்குள்ளவனையும் ஏன் ஈர்க்கிறேன்? பாத்திரத்தில் பாசி படர்ந்துள்ளது என்பதற்காக பாத்திரத்தையே தூக்கி எறிய முடியுமா? அதுபோலத் தாயாகிய என்னிடம் வந்து சேர்கின்ற ஆன்மாக்களின் பாசியை நீக்க வேண்டி அவர்களையும் ஈர்க்கிறேன். பாத்திரங்களை வீசி எறிய மாட்டேன்

மகனே! அமைதிக்கு வழி:
நாளைய உலகம் ஆன்மிக உலகம்!
ஆதிபராசக்தி உலகம்!
ஆதிபராசக்தி யுகம்

அரும்பத் தொடங்கி விட்டது. நாளைய உலகிற்கு ஆன்மிகமும் வேள்விகளும் முக்கியம்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் (எக்ஸ்பிரஸ்,மதுரை,செங்கல்பட்டு) அனைத்து ரெயில்களும் மேல்மருவத்தூரில் (வழியாக) நின்று செல்லும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts