background img

புதிய வரவு

தமிழகத்தில் நெருக்கடி நிலை: கருணாநிதி "திடுக்' குற்றச்சாட்டு

ஈரோடு: ""சத்தமில்லாத நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவுகிறது,'' என, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

ஈரோட்டில் நேற்று இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: திராவிட இயக்கத்தை தென்னகத்தில் பரவச் செய்யவும், இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றவும், திராவிட இயக்கம், தி.மு.க., என்ற அரசியல் இயக்கமாக மாறியது. முதல் தேர்தல் அதிகமான வெற்றியை தராவிட்டாலும், அதை தொடர்ந்து ஆட்சியை பிடிக்குமளவுக்கு வளர்ந்து, இன்றைய தினம் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. இந்தக் கூட்டணியில் உள்ள அத்தனை பேரும், அடியேனை முதல்வராக அடையாளம் காட்டுகின்றனர். ஐந்து முறை முதல்வனாக இருந்த என்னை ஆறாவது முறையும் முதல்வராக்க எண்ணுகின்றனர். இந்த அணி என்னை சுட்டிக்காட்டுவது போல், எதிரணியில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு சுட்டிக் காட்டினால் மறுநாள் பத்திரிகைகளில் அடிதடி, ரகளை என்ற புகைப்படங்கள் வெளியாகும். அங்கே ஒருவர் ஆண் தலைவர், இன்னொருவர் பெண் தலைவர் இருக்கிறார். ஒரு வேளை நான் கூறிவிட்டேன் என்பதற்காக, இதன் பிறகு பெயரை சொன்னாலும் சொல்லலாம். கூட்டணியினர் என்னை நம்புகின்றனர். நான் அவர்களை நம்புகிறேன். ஆட்சியில் நாங்கள் செய்த சாதனைகளை, வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்துவிட்டு என்னை நம்புகின்றனர்.

ஒரு அரசின் திட்டங்களை, அடுத்து வந்த அரசும் தொடர்ந்தால் தான் அந்த திட்டம் தொடர முடியும். காமராஜர் செயல்படுத்திய ஆரம்பக்கல்வி திட்டத்தை, சத்துணவு திட்டத்தை, நானும், அதன் பிறகு எம்.ஜி.ஆரும், அவரைத் தொடர்ந்து நாங்களும் தொடர்ந்தோம். இது தான் உண்மையான சத்துணவு என்பதற்கேற்ப ஐந்து முட்டை வழங்குகிறோம். பிள்ளையை ஊட்டி வளர்த்து, ஆரம்ப கல்வியையும் ஊட்டிய அரசு தான் தி.மு.க., அரசு. மத்திய அமைச்சர்கள் புகழக் கூடிய அளவுக்கு, மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில் தமிழகம் கல்வித்துறையில் வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு தி.மு.க., அரசு தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா? "தொழில் வளர்ச்சியை நசுக்கிவிட்டார்' என்று அம்மையார் குறை கூறியிருக்கிறார். தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்க வெளிநாட்டினர் போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் நிறைய தொழிற்சாலைகள் உருவானதால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு மின் திட்டங்களை துவங்கவில்லை. நாம் தான் துவங்கியிருக்கிறோம்.நெய்வேலி விரிவாக்க திட்டமும், கூடங்குளம் திட்டமும் முடிவடையவில்லை. இத்திட்டங்கள் நிறைவடைந்தால், உங்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்.


அன்னை இந்திரா காலத்தில் நெருக்கடி நிலை நாட்டில் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் அவர் கூறும் போது, "நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட கொடுமைகளுக்கு அதிகாரிகள் தான் காரணம்' என்று கூறி, சென்னையில் நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார். அது போன்ற ஒரு கொடுமை இப்போது மேல்மட்ட அதிகாரிகளால் அமலுக்கு வந்துள்ளது. சத்தமில்லாமல் எமர்ஜென்ஸி நிலைமை இப்போது தமிழகத்தில் நடக்கிறது. தி.மு.க., கூட்டணியை உடைக்க நெருக்கடி கால கொடுமை மீண்டும் வீசப்படுகிறது. இதை நிதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகம் இருக்கும் வரை, தமிழனுக்கு சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை எங்கள் அணிக்கு தோல்வி கிடையாது. என்றைக்கும் வெற்றி தான். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts