background img

புதிய வரவு

எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரேயை இன்று காலையில் அவரது வீட்டில் புகுந்து போலீசார் கைது செய்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள், சமூகநல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை பார்லி.,யில் எதிர்‌கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஐதராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர் அசாம் மாநிலம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைக்கு போராடட்டம்: பா.ஜ., ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌ தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் இன்று மாலை பேசுகையில்: அரசு அடிப்ப‌டை உரிமையை மறுத்திருக்கிறது. அரசும் , பிரதமரும் ஏன் மவுனமாக இருக்கிறது ? இவரது கைது நியாயமற்றது. ஊழலுக்கு எதிராக போராடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பார்லி., முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் தற்போது நாங்கள் எந்த ஒரு மசோதாவுக்காகவும் போராடவில்லை. இப்போது அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றனர்.

அன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு: ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். பிரசாந்தி பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர் ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.

யோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு: கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்: அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.


பார்லி.,யில் அமளி - ஒத்திவைப்பு : ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்: இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று மாலையில் கண்டன பேரணி: இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும் கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.

காலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே : தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.

சென்னையில் உண்ணாவிரதம்: சென்னை அடையாறில் ஹ‌சாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வு பெற்ற ஐ.ஏ., எஸ்., அதிகாரி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி மற்றும் மதுரையிலும் பேரணி ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வருந்ததக்க விஷயம் என்கிறார் சிதம்பரம்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு போராட்டத்தை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு எனவும், எவ்வித காரணமும் இல்லாமல் போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும் , ஹசாரே மற்றும் ஆதரவாளர்களிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விட்டனர். அமைதியை குலைக்க முற்படுவதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ஹசாரேவை சந்திக்க ரவிசங்கர் முடிவு : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயாராக உள்ளேன். மத்தியில் மொத்த நிர்வாக தோல்வியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். ஹசாரேவை சந்திக்க டில்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.


அன்னாவை விடுதலை செய்ய நாடு முழுவதும் போராட்டம்:அன்னா ஹசாரே விடுதலை செய்ய நாடு முழுவதும் பல சிறிய, பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹசாரேவை விடுதலை செய்ய வலியுறுத்தல் : அன்னா ஹசாரேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் ஒன்றாக அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts