background img

புதிய வரவு

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

அந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.

ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது.






“குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்… பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை உச்சரிப்பதால் என்ன பலன்? மேலும் சுவடிகளை மூடிவைத்ததுமே அனைத்தும் மறந்துவிடுகிறது எனக்கு… நான் கற்பது வீணாக அல்லவா போய்விடுகிறது?”

“குழந்தாய்… கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தயக்கிமின்றி ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளவேண்டும். சந்தேகம் கேட்பவன் அந்த நொடி வேண்டுமானால் முட்டாளாக அடுத்தவர்களுக்கு தெரியலாம். ஆனால் கேட்க்காதவர்கள் வாழ்க்கை முழுதும் முட்டாள்களாகத் தான் இருப்பார்கள். நீ சந்தேகம் கேட்டதற்கு மிக்க நன்றி. உன் மூலம் ஒரு அருமையான விஷயத்தை அனைவருக்கும் உணர்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் சொல்வதை சிரத்தையுடன் செய்வாயா?”

குரு கேட்க, “நிச்சயம் குருவே. தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்” என்றான் சீடன்.

குரு உடனே ஆஸ்ரம சமையற்கூடத்துக்கு சென்று, அங்கு அடுப்பு கரி போட்டு வைக்கப்பட்டிருந்த மூங்கில் கூடை ஒன்றை கொண்டு வந்தார். கூடை முழுதும் கரி படிந்து அதன் நிறமே மாறியிருந்தது.

அந்த கூடையை சீடனிடம் கொடுத்தவர், “நீ நேரே ஆற்றுக்கு போய், இதில் தண்ணீர் கொண்டு வா” என்றார்.

சீடன் சற்றும் யோசிக்காமல், கூடையுடன் ஆற்றுக்கு விரைந்தான். மூங்கில் கூடையில் நீர் நிற்குமா என்ன? இவன் ஆஸ்ரமம் திரும்புவதற்குள் மொத்த நீரும் ஒழுகிவிட்டது.

bamboo basket test

குரு ஏன் இப்படி ஒரு வெட்டி வேலையை நம்மிடம் ஒப்படைத்தார் என்று எண்ணியபடியே வெறுங்கூடையுடன் சென்றான்.

குரு சிரித்தபடி, “உன் வேகம் பத்தாது. நீர் வடிவதற்குள் இங்கு இருப்பது போல வா” என்று மறுபடியும் ஆற்றுக்கு சென்று நீரை கொண்டு வர பணித்தார்.

இந்த முறை சீடன் வேகமாக ஓடி வந்தான். ஆனாலும், வந்து சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது.

கூடையில் தண்ணீர் கொண்டு வருவது ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சீடன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் குருவோ, “எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய்… இன்னும் வேகமாக வா” என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார்.

அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.

“என்னை மன்னியுங்கள்… இது அர்த்தமற்ற செயல் போலத் தெரிகிறது. என்னால் மட்டுமல்ல எவராலும் இது முடியாது என்று கருதுகிறேன்” என்றான், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி.

அவனைப் பார்த்து புன்னகைத்த குரு, “நீ இதைப் அர்த்தமற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும்” என்றார்.

சீடன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காட்சியளித்தது!

குரு புன்னகை பூத்தபடி சொன்னார் : “மகனே… வேத மந்திரங்களும் கீதையும் படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. ஒருவருக்கு மந்திரங்களின் பொருள் புரியாமல் இருக்கலாம்; பொருள் புரியாமல் படிப்பது அர்த்தமற்றதாக தோன்றலாம். அவை நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், இந்த கூடை, நீரை அள்ள எடுத்தக்கொண்ட முயற்சியில் சுத்தமானதை போல நாமும் உள்ளும் புறமும் அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிடுவோம்!” என்றார்.

“இப்போது புரிந்தது குருவே…!” என்று அவர் கால்களில் வீழ்ந்தான்.

மந்திரங்களை பொருள் தெரியாமல் உச்சரித்தாலும் அதில் பலனுண்டு என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் தரமுடியுமா என்ன?

(பொருள் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்று நமக்கு தெரியும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்கிற சந்தேகம் நமக்கு இருந்து வந்தது. மேற்படி கதை நமக்கு அதை மிக மிக தெளிவாக உணர்த்தியது. எனவே வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்!!)

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts