background img

புதிய வரவு

அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை: உச்சநீதிமன்றம்


அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா முழுவதிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வரும் கருணா சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குப்பைக் கூளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை, ஆடு, மாடுகள் உண்பதால், அதனுடைய வயிற்றில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சி ஒன்றில், ஆடு, மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ``அணுகுண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பிளாஸ்டிக் உபயோகத்தால், நகர் மற்றும் கிராம பகுதிகள் நாசமடைகின்றன. நிலம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும்'' என்று தெரிவித்தனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts