background img

புதிய வரவு

கனிமொழியை காப்பாற்ற கருத்துக் கணிப்பு வெளியானது: நா.பாலகங்கா

* சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக நடவடிக்கை எடுத்ததாக, தி.மு.க., தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததே?

பாரபட்சமில்லாமல் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றது. இருந்தாலும், ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடாவை முழுமையாக தேர்தல் கமிஷனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினரின் பேச்சை கேட்டு நடப்பதை, தேர்தல் கமிஷன் தடுத்து விட்டது. தேர்தல் பணியில் வெளிமாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்ததால், ஆளுங்கட்சியின் அத்துமீறல் ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. ஓட்டுப் பதிவிற்கு முன், வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்'களை தேர்தல் கமிஷன் வழங்கியது பாராட்டுக்குரிய நடவடிக்கை. இந்த காரணங்களால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது.

* உங்கள் கட்சி சார்பில் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

ஆளுங்கட்சி முறைகேடு குறித்து பல கட்டத்தில், தேர்தல் கமிஷனின் உதவியை நாங்கள் நாடினோம்; அவர்களும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர். தமிழகம் முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், சேகர்பாபு மூன்று சக்கர வண்டிகளை கொடுத்த போது, பிடித்து கொடுத்தோம். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. கொளத்தூரில், பணம் கொடுப்பதை புகாராக தெரிவித்தோம்; ஒன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. திருச்சி மாவட்டத்தில், அமைச்சர் நேரு தொகுதியில், ஐந்தரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. கீழ்பென்னத்தூரில், 15 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இப்படி பரவலாக தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளால் பல இடங்களில் பெருமளவு பணம் பிடிபட்டது.

* கடைசி நேரத்தில், ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு செய்ததால், தேர்தலில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

ம.தி.மு.க.,வை நாங்கள் விரோதமாக நினைக்கவில்லை. ஆகவே, எங்கள் மேல் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. எங்களுக்கு எதிராக அவர்கள் தேர்தல் பணி செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., எடுத்த நிலைப்பாட்டினால், ம.தி.மு.க.,வின் ஓட்டுகள் எங்கள் அணிக்கு கிடைத்துள்ளது.

* "ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது; அவர் கைது செய்யப்படுவாரா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் போது, கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 80 பக்கம் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது, தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது கனிமொழி பெயர் சேர்த்திருந்தால், தேர்தல் பிரசாரம் பாதிக்கும் என்பதால், பெயர் சேர்க்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "சதி செய்துள்ளார்' என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இணை கூட்டாளியாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ராஜாவை கைது செய்தது போல், அவர் கூட்டாளியையும் கைது செய்ய வேண்டும்.

* ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு அறிக்கை தாக்கலின் போது, பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதை ராஜ்யசபா, எம்.பி.,யாக எப்படி பார்க்கிறீர்கள்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்பு குறித்தும், ஓராண்டாக பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. பொதுக்கணக்கு குழு கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக தயாரித்து, அதை சபாநாயகரிடம் தருவதற்கு குழு தயாராக இருந்தது. பொதுக்கணக்கு குழு தலைவர் முரளிமனோகர் ஜோஷி இந்த அறிக்கையை தாக்கல் செய்த போது, காங்கிரஸ், தி.மு.க., எம்.பி.,க்கள் தகராறு செய்தனர். பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை காணாத வகையில் கூச்சல், குழப்பம் நிலவியது. கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, முரளிமனோகர் ஜோஷி புறப்பட்டு செல்லுமளவுக்கு, நிலைமை மோசமாக இருந்துள்ளது. அதன் பிறகு, "நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம்' என்று கூறி, பொதுக்கணக்கு குழுவின் இடைக்கால தலைவராக, சைபுதீன் சோசை நியமித்து, அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினர். பொதுக்கணக்கு குழுவிற்கு லோக்சபா உறுப்பினர் தான் தலைவராக இருக்க முடியும்; எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தான் தலைவராக வர முடியும். இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், ஊழலை மறைக்கும் நோக்குடன் விதிமுறைகளை மீறி செயல்பட்டு, பார்லிமென்ட் நெறிமுறைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தினர். நல்லவேளையாக, மீண்டும் ஜோஷி தலைவராக்கப்பட்டுள்ளார். இனி அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும்.

* சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

விலைவாசி உயர்வு, அதிகார பீடத்தில் லஞ்ச லாவண்யம், குடும்ப ஆட்சி, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, பல காரணங்களால், தமிழக மக்கள் இந்த ஆட்சி எப்போது தொலையும் என காத்திருந்தனர். தமிழகத்தில் திறம்பட ஆட்சி செய்வதற்கு, "அம்மா' தான் தகுதியானவர் என்று பொதுமக்கள் முடிவு செய்து தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.

* சமீபத்தில் வெளியான தனியார், "டிவி' கருத்துக் கணிப்பு, தி.மு.க.,விற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளதே?

கனிமொழி கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி போட வேண்டுமென்பதற்காக, தி.மு.க.,வே இதுபோன்ற கருத்துக் கணிப்பை வெளியிட வைத்துள்ளது.

* தேர்தல் முடிவில், அ.தி.மு.க.,விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமையுமா?

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை. "அம்மா' தலைமையில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது உறுதி. எங்களது கூட்டணிக் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

* அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் மீது முதல்வர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளாரே?

தோல்வி பயத்தின் விளிம்பில் முதல்வர் நிற்கிறார். அதனால், அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். சட்டப்படி, அ.தி.மு.க., வழக்குகளை சந்திக்கும்.


நா.பாலகங்கா, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணைச் செயலர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts