background img

புதிய வரவு

டில்லியில் சோனியாவை சந்திக்காதது ஏன்? கருணாநிதி விளக்கம்

சென்னை :""கனிமொழி சிறையில் இருக்கும் நேரத்தில், சோனியாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, டில்லியில் அவரை சந்திக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

சமச்சீர் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதே?
சமச்சீர் கல்வி எல்லா மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் உட்பட பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து, பல கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி, சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றால், எதிர்கால தலைமுறைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தி.மு.க., ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், திரும்ப பறிமுதல் செய்யப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளாரே?

உரியவர்களிடம் பறிமுதல் செய்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ராஜிவை கொலை செய்தது நாங்கள் தான் என்று விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். அதற்கு, தி.மு.க.,விடம் உதவிகளைப் பெற்றோம் எனவும் கூறியுள்ளாரே?

அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.

தி.மு.க., திட்டங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டு வருகிறதே?

வருந்த வேண்டியவர்கள் ஓட்டளித்தவர்கள்.

டில்லி பயணம் பற்றி?

திகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜா, என் மகள் கனிமொழி ஆகியோரை சந்திக்க டில்லி சென்றேன். டில்லியில் நான் தங்கியிருந்த ஓட்டலில், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சிதம்பரம், புதுச்சேரி நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னை சந்தித்தனர்.

டில்லியில் சோனியாவை சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் சந்திக்கவில்லையே?

சோனியாவை சந்திப்பதை நானாகவே தவிர்த்தேன். என் மகள் கனிமொழி சிறையில் இருக்கும் இந்த நேரத்தில், சோனியாவை சந்தித்து, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று, அவரை சந்திப்பதை தவிர்த்தேன்.

மேலவை வராது என்று முதல்வர் கூறியுள்ளாரே?

நீங்கள் தான் (பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும்.

தி.மு.க., தோல்வியடைந்து உள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கட்சிப் பத்திரிகையில், நானும், பொதுச் செயலரும் தொடர்ந்து எழுதி வருகிறோம். அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அமைச்சர் மரியம்பிச்சை மரணத்தில் சதி இருப்பதாக முதல்வர் கூறியுள்ளாரே?

போலீசார், அதுகுறித்து தீவிரமாக விசாரித்து உண்மையைச் சொல்லட்டும்.

கனிமொழி ஜாமின் மனு 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

துணிச்சலோடு சமாளிப்பேன் என, கனிமொழி கூறியுள்ளார். சட்ட ரீதியாகவும் கோர்ட்டை அணுகுகிறோம். நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் : அமைச்சர் மரியம்பிச்சை மறைவு குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறும்போது, ""அ.தி.மு.க., அமைச்சர், இஸ்லாமியத் தோழர் மரியம்பிச்சை மறைவுக்கு, தி.மு.க., சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts