background img

புதிய வரவு

நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

சென்னை, மே 14: தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 203 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க. 146 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
அதன் பிறகு காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் ஜெயலலிதா, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து, அ.தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை அவரிடம் அளிப்பார். ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் ஜெயலலிதா உரிமை கோர உள்ளார். அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது. இதையடுத்து அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பக்கூடும்.

அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் திங்கள்கிழமை நண்பகல் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் முதலில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்.

ஏற்பாடுகள் தீவிரம்: அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுவது சனிக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா மேடை அலங்கரிப்பு, அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தும் பணிகள் போன்றவை அரங்கின் உள்ளே நடைபெற்று வருகின்றன. அரங்கின் வெளியே பதவியேற்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் பிரமாண்டமான திரைகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts