background img

புதிய வரவு

தமிழகத்தில் 2.11 லட்சம் தபால் ஓட்டு வினியோகம் : தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தகவல்

புதுக்கோட்டை : ""தமிழகத்தில், 2.11 லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை (தனி), ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளுக்கான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், உதவி தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன், கலெக்டர் சுகந்தி, எஸ்.பி., முத்துச்சாமி இருந்தனர். ஆய்வு முடித்தபிறகு, பிரவீன் குமார் கூறியதாவது: தபால் ஓட்டுகளை பொறுத்தவரை, பணி நேரம் உள்ளிட்ட பிரச்னைகளால், கடைசி தேதிக்கு பின்னர் பலர் தாமதமாக விண்ணப்பித்ததால், முழுமையாக விண்ணப்பங்களை வழங்க முடியவில்லை. இதுவரை தமிழகம் முழுவதும், 2 லட்சத்து, 11 ஆயிரம் தபால் ஓட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டு போடுபவர்கள், ஓட்டு எண்ணிக்கை துவங்கும், 13ம் தேதியன்று, காலை 8 மணிக்குள் ஓட்டுகளை கொடுக்க வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்ட விதிமுறைகளை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்களில் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஒட்டுவது, 1959ம் ஆண்டு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் செலவின கணக்கு, பறக்கும் படை போன்ற புதிய விதிமுறைகளை அமல்படுத்தி, பணப்பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை கடுமையாக கண்காணித்தோம். அது ஒரு சிலருக்கு பாதகமாக இருப்பதால், எங்களை குறை கூறுகின்றனர்.
கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது. பணப்பட்டுவாடா செய்யவில்லை என, முழுமையாக மறுக்கவில்லை. வெளிப்படையாக நடக்காத வண்ணம் தடுத்திருக்கிறோம். மறைமுகமாக, சில இடங்களில் மட்டும், எங்களின் கண்காணிப்பையும் மீறி சிறிய அளவில் பணம் கொடுக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, தமிழகம் முழுவதும், 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 52 ஆயிரம் வழக்குகள் சுவரொட்டி, சுவர் விளம்பரம் தொடர்பானவை. பணப்பட்டுவாடா செய்ததாக, 1,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு முதல்நாளான, 12ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.
ஓட்டு எண்ணும் இடங்களில், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் மட்டுமே மொபைல் போன் கொண்டு செல்லலாம். "பிரஸ் ரூம்' வரை, பத்திரிகையாளர்கள் மொபைல் போன் கொண்டு செல்லலாம். மதுரை கலெக்டர் சகாயம் மட்டுமல்லாது, தேர்தல் அலுவலர்கள் அனைவருக்கும் தேர்தல் கமிஷன் உரிய பாதுகாப்பு அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் கமிஷனரான நான் ஹீரோ இல்லை. தேர்தலை சிறப்பாக நடத்திய அதிகாரிகள், முழுமையாக ஒத்துழைப்பு அளித்த தமிழக மக்கள் தான் ஹீரோ. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts