background img

புதிய வரவு

போருக்கு பிறகு மக்களின் வாழ்க்கை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களில் சுமார் 17 ஆயிரம் பேரைத் தவிர ஏனையோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகின்ற போதிலும் இன்னும் பலர் தரப்பாள் கொட்டில்களிலேயே வசிக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றப்படும்போது உடனடியாகத் தங்குவதற்கு வழங்கப்பட்ட கூடாரங்களைக் கொண்டு இந்தத் தரப்பாள் கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தற்காலிக வீடும், அதற்கு அடுத்ததாக நிரந்தர வீடமைப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த உதவிகள் மீள்குடியேறியுள்ள அனைவருக்கும் கிடைக்கவில்லை என மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வாழ்வாதார உதவிகளும் சீராக வழங்கப்படவில்லை, உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பாக போக்குவரத்திற்குரிய வீதிகள் முறையாகத் திருத்தப்படவில்லை, பொதுமக்களுக்கு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றததின் ஊடாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் அரச நிதியொதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பு உட்பட உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களில் எவரையும் அரசாங்கம் புறக்கணிக்கவில்லை. கிடைக்கின்ற உதவித்திட்டங்களுக்கமைய அனைவருக்கும் படிப்படியாக உதவிகள் வழங்கப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts