background img

புதிய வரவு

சலுகைகள் ஏதாவது இருக்குமா? நிதியமைச்சர் பிரணாப் இன்று அறிவிப்பு

மத்திய பட்ஜெட் இன்று பெரிய எதிர்பார்ப்புடன் தாக்கலாகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 80வது பட்ஜெட் ஆகும். நடுத்தர மக்கள், விவசாயத்தை முன்னேற்ற வழிகள், உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு அதிக முன்னுரிமை, அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு அதிக முன்னுரிமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பட்ஜெட்டிற்கு முன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை அரசின் செயல்பாட்டைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவது வழக்கம். அதில், மொத்த வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை காட்டப்பட்டிருக்கிறது. அதை மீடியாக்கள் அதிக விளம்பரப்படுத்தியுள்ளன. ஆனால், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த சதவீதத்தை எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். எர்னஸ்ட் அண்ட் யங்க் என்ற பொருளாதார அமைப்பின் தலைவர் அஸ்வின் பரேக் கூறுகையில், " 9 சதவீத வளர்ச்சி என்பதை அடைவது சிரமம். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இதற்கு ஆதாரம். இதைவிட லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் சுமையாகும்' என்றிருக்கிறார். தவிரவும் மற்ற துறைகள் வளர்ச்சி காணப்படாமல் மொத்த வளர்ச்சி என்பது சுலபமல்ல என்றும் கூறப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்படும் 2011 - 2012ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. அதே போல சேமிப்பு மேற்கொள்ளும் போது, அதிக சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், சமீபத்திய விலைவாசி உயர்வு பாமர மற்றும் நடுத்தர மக்களின் பர்சை காலியாக்கி விட்டதால், அரசு அதை தடுப்பதுடன், சேமிப்பையும் அதிகரிக்க வழிகாணும் என்ற கருத்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய நேரடி வரிவிதிப்பு நடைமுறை இன்னமும் அமலாகவில்லை. ஆனால், அதன் நோக்கங்களின் படி தனி நபர் வருமான வரி வரம்பு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று, வரி குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

விவசாயம் : அரசுக்குள்ள மற்றொரு பயங்கர சவால், விவசாயத்துறை வளர்ச்சியாகும். இந்த ஆண்டில் பருவ மழை நன்றாக அமைந்த காரணத்தால், அரசு வெளியிட்ட சர்வேயின்படி, விவசாய வளர்ச்சி 5 சதவீதத்தைத் தாண்டி விட்டது. இருந்தாலும், நிதியமைச்சர் உலக உணவு தானிய உற்பத்தி நிலைமையைக் கணக்கில் கொண்டு, இந்த உற்பத்தியை அதிகரிக்க விரும்பி, இனி இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த விஷயத்தில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், "விவசாயத்தில் இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள் தேவை, விவசாயத்தில் அறுவடை காலத்திலும், விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் அரசும் தனியாரும் இணைந்த ஆதரவுக் கொள்கை தேவை' என்று வலியுறுத்தியுள்ளார். அதைத் தவிர, பிரதமருக்கு விவசாயத் தொழில் சம்பந்தமாக ஆலோசனை கூறும் பூபீந்தர் ஹோடா குழு, " விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 4 சதவீத வட்டியில் தரப்பட வேண்டும்' என்று யோசனை கூறியிருக்கிறது. இது பட்ஜெட்டில் எதிரொலித்தால், விவசாயிகளைக் கவரும் திட்டமாக அமையும். ஏனெனில், அடுத்த ஆண்டு விவசாய மொத்த உற்பத்தி 3 சதவீதத்தை மட்டுமே எட்டும் என்று அரசு அறிக்கை கூறுகிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய நிலம் மொத்த அளவில் 2 சதவீதம் சுருங்கி விட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் 1.85 கோடி எக்டேர் விவசாய நிலம் இருந்தது. உணவு உற்பத்தியை இது பாதிக்கவில்லை என்றாலும், இது கவலை தரும் அம்சமாகும். அது போல, கால்நடைச் செல்வங்களால் கிடைக்கும் வளமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பால் பொருட்களுக்கு இறக்குமதியை நம்ப வேண்டி வரும் என, அரசின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. பால் உற்பத்தி அதிகரிப்பு, கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கு நடைமுறை தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தை: இதைத் தவிர, கறுப்புப்பணம் மீட்புக்கான நடவடிக்கை குறித்த தகவல் பட்ஜெட்டில் இருக்கும். பங்குச் சந்தை தற்போது இறக்கத்தில் உள்ளது. சோதிடர்கள் கருத்துப்படி, இது நவம்பர் வரை தொடருமாம். மேலும், நிதியமைச்சர் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட மொத்த நிதிப்பற்றாக்குறை அபாயத்தை அடிக்கடி பேசுபவர். அதனால் தான் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அதிக வருவாயை ஈட்டித் தந்திருக்கிறார். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு எண்ணெய் கம்பெனிகளை பாதிக்காதிருக்க மத்திய அரசின் சுங்க வரிக் குறைப்பை அவர் அறிவிக்கலாம்.மேலும் தமிழகம், அசாம் உட்பட ஐந்து மாநில தேர்தலுக்காக, சில சலுகைகளும் இதில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


10 தடவை மொரார்ஜி பட்ஜெட் : இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது ஆறாவது பட்ஜெட்டை ( 2011 - 2012) தாக்கல் செய்கிறார். இது இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட். தவிரவும் மத்திய நிதியமைச்சராக ஆறாவது தடவை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின் நவ., 26, 1947 ல் முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் அதிக அளவாக பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். மத்திய நிதியமைச்சர்களாக சிதம்பரம், யஷ்வந்த் சின்கா, சி.டி.தேஷ்முக், ஒய்.பி.சவான் ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். அந்த வரிசையில் இன்று இடம் பெறுகிறார் பிரணாப்.÷ நரு, இந்திரா, ராஜிவ், சரண்சிங், என்.டி.திவாரி, மதுதண்டவதே போன்றவர்கள் ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். இரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் ஜஸ்வந்த் சிங், சி.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர்கள்.நாடு சுதந்திரம் பெற்ற பின், இன்றுடன் 64 முறை வழக்கமான பட்ஜெட்டும், 12 இடைக்கால பட்ஜெட்களும் மற்றும் நான்கு முறை விசேஷ கோரிக்கைக்கான நிதிநிலை அறிக்கைளும் சேர்த்து, மொத்தம் 80 என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts