background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க ஜே.பி.சி., : டி.ஆர்.பாலு, தம்பிதுரைக்கு இடம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும் இடம்பெறுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தம்பிதுரை இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதை ஏற்றுக் கொண்டு, கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம், பார்லிமென்டில் முறைப்படி அறிவித்தார். இந்நிலையில், கூட்டுக்குழு அமைக்க வழி வகை செய்யும் தீர்மானத்தை, லோக்சபாவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிந்து பேசினார்.
அந்த தீர்மானத்தில், கூட்டுக்குழு அமைப்பது பற்றியும், அதற்குண்டான நடைமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, அந்த குழுவில், லோக்சபா எம்.பி.,க்கள், 20 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேரும், மொத்தம், 30 பேர் இடம்பெறவுள்ளனர். முதலில், 20 பேர் கொண்ட குழு அமையும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் கோரிக்கையை அடுத்து, தற்போது, 30 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்படும். இதன் தலைவரை, சபாநாயகர் மீராகுமார் தேர்வு செய்வார். காங்கிரஸ் எம்.பி.,யான பி.சி.சாக்கோ பெயர் பரவலாகப் பேசப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, 1998 முதல், 2009ம் ஆண்டு வரையிலான அடுத்தடுத்த அரசுகளின் கொள்கை முடிவுகள், அவற்றை அமல்படுத்திய விதம் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களையும் இந்த குழு ஆராயும். தொலைத்தொடர்பு லைசென்ஸ்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதற்கான விலை நிர்ணயம் ஆகிய விஷயங்களும் ஆராயப்படும்.
இவற்றில் ஏதாவது குறைகள், குற்றங்கள், முரண்பாடுகள் இருந்தால், அவற்றை, இக்குழு சுட்டிக்காட்டும். தவிர, இந்த குறைபாடுகளுக்கு தீர்வாக பரிந்துரைகள், யோசனைகளையும் அளிக்கும். இக்குழு அமைக்கப்பட்ட தினத்தில் இருந்து, குழுவின் செயல்பாடுகள் துவங்கும். அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகள், போதுமான ஒத்துழைப்பை இக்குழுவுக்கு வழங்கும். மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும்.
அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இறுதிக்குள், இக்குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் என்பது, மழைக்கால கூட்டத் தொடர் தான்.
அந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் வாக்கில் நிறைவடையும். அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை அறிக்கையை, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த குழு அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த குழுவில் இடம்பெறும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் யார் யார் என்பது குறித்து, சில நாட்களில் தெரியவரும் நிலையில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள லோக்சபா எம்.பி..க்கள் பற்றிய விவரம்:
கி÷ஷார் சந்திரதேவ், பபன்சிங் கதோவார், ஜெய்பிரகாஷ் அகர்வால், திபீந்தர்சிங் ஹுடா, சாக்கோ, மணிஷ்திவாரி, நிர்மல் காத்ரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.ஆர்.பாலு, கல்யாண் பானர்ஜி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, ஹரேன் பதக், கோபிநாத் முண்டே, சரத்யாதவ், தாராசிங் சவுகான், அகிலேஷ் யாதவ், குருதாஸ் தாஸ் குப்தா, அர்ஜுன் சரண்சேத்தி, தம்பிதுரை ஆகியோர்.
முன்னதாக, தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவை முன்னவர் பிரணாப், "ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக பார்லிமென்ட் முடங்குவது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. முன்பு தெகல்கா விவகாரத்தில் அன்று அமைச்சராக இருந்த ஜேட்லி, ஜே.பி.சி., அமைப்பதை நிராகரித்தார்.
"ஒரு குழுவாக விசாரிப்பதை விட, பார்லிமென்டில் விவாதிக்கலாம்' என்றார். ஆனால், இன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அவை முன்னவர் என்ற பொறுப்புடன் இது நிறைவேற்றப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "நாங்கள் ஜே.பி.சி., வேண்டும் என்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதா? அதுவும் எது முறையான கோரிக்கை, எது முறையற்றது என்பதை அறிந்த பிரணாப் இதை விளக்க வேண்டும்' என்றார்.
எதிர்க்கட்சியினர் போக்கை, "மாவோயிஸ்டுகள் போன்றவர்கள்' என, பிரணாப் சுட்டிக்காட்டி பேசியதை சுஷ்மா குறிப்பிட்ட போது, அதற்கு பதிலாக பிரணாப், "இடது சாரி தீவிரவாதிகள், பன்றிகளின் கூடாரம் பார்லிமென்ட் எனக் கூறுகின்றனர். ஆகவே, எல்லாரும் பொறுப்பாக நடப்பதே சரியான வழி' என, பதிலளித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts