background img

புதிய வரவு

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைவரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகையா பாண்டியன் என்பவர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளார். அசோக் குமார் என்பவர் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு யோசிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக திரிபோலிக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி இந்தியர்களை மீட்க அனுமதி கோரி லிபிய அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாம். ஆனால் இதுவரை பதில் ஏதும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிபியாவுக்கு அருகே நிலை கொண்டுள்ள ஒரு தனியார் கப்பலையும் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கப்பலில் 1000 பேர் வரை ஏற்றிக் கொண்டு வர முடியுமாம்.

அதேசமயம், திரிபோலிக்கும், பெங்க்சாய் நகருக்கும் இடையே கப்பல்களை இயக்கி அதன் மூலம் இந்தியர்களை, எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகருக்குக் கொண்டு செல்லும் திட்டத்தையும் இந்தியா பரிசீலித்து வருகிறது. அலெக்சான்டிரியாவிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அவர்களை அழைத்து வர இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்படுகிறது. மேலும், தயார் நிலையில் சில விமானங்களை வைத்திருக்குமாறு ஏர் இந்தியாவையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், லிபியாவிலிருந்து மீட்கப்படும் இந்தியர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்தில் இதேபோல மக்கள் போராட்டம் வெடித்தபோது அங்கிருந்து தாயகம் செல்ல விரும்பிய இந்தியர்களிடம் தாறுமாறாக ஏர் இந்தியா நிறுவனம் பணம் கறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

லிபியாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் திட்டத்தை ஓரிரு நாளில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

வீடு வீடாக புகுந்து கொல்வோம்-கடாபி எச்சரிக்கை

இதற்கிடையே, தனக்கு எதிராக போராடுபவர்களை வீடு வீடாக புகுந்து பிடித்துக் கொல்லுமாறு லிபிய அதிபர் கடாபி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக அனைத்து ஆதரவாளர்களும் ஒன்று திரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எதிரான இந்த போராட்டம் வெளிநாடுகளின், குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் சதியாகும். இதை முறியடிக்காமல் ஓய மாட்டேன். செத்தாலும் தியாகியாகத்தான் சாவேன். வீடு வீடாக புகுந்து போராட்டக்காரர்களை கொல்லவும் தயங்க மாட்டேன் என்று உறுமியுள்ஏளார்.

எகிப்து, சூடான் ஆகிய நாடுகளில் தொடங்கிய இந்த மக்கள் புரட்சி அரபு நாடுகளான லிபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் என தொடர்ந்து வருவதால் அரபு நாடுகள் பெரும் கலக்கமடைந்துள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts