background img

புதிய வரவு

காய்கறிகள், பயறு உற்பத்தி அதிகரிக்க ரூ.2,200 கோடி

புதுடில்லி : காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொது பட்ஜெட்டில் 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த சில மாதங்களாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், தினை மற்றும் கால்நடைகளுக்கான தீவனம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது, அரசுக்கு கவலை அளித்தது. மொத்த விலை குறியீட்டு எண்ணில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி ஆகியவற்றின் பங்கு 70 சதவீதம். எனவே, இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இந்த பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2,200 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சிக்கு வித்திடும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு வகைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்துக்கும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் இடையில், பெரும் பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, இந்த ஆண்டில் கவனம் செலுத்தப்படும். உணவு பணவீக்கத்தின் அளவு, தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் தான் உள்ளது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு, ஏற்கனவே இருந்த 6,755 கோடி ரூபாயில் இருந்து, தற்போது 7,860 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயறு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி, இந்த நிதியாண்டில் 20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இத்துறையின் தன்னிறவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கு எட்டப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தரமான காய்கறிகளை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, 300 கோடி ரூபாய் செலவில் காய்கறி சந்தை அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts