background img

புதிய வரவு

யந்திர சனீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, நாம் சிலை வடிவில் தான் தரிசித்து இருப்போம். ஆனால் வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் சனி பகவான் யந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் காட்சி அளிப்பது மிகவும் சிறப்பாகும்..

ஸ்தல வரலாறு:::

பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் யந்திர பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் வடிவில் சிலை வடித்து அதில் சிறிய கோவிலும் எழுப்பப்பட்டது.

காலவெள்ளத்தில் கோயில் இடிந்து, சிலை திறந்தவெளியில் இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் மீண்டும் கோயில் எழுப்பினர். யந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், இவரை 'யந்திர சனீஸ்வரர்' என்றும் மக்கள் அழைக்கின்றனர்..

நடை திறக்கும் நேரம்::

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை. சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மணி.
சுவாமி அமைப்பு:::

இங்கு சனீஸ்வரரே மூலவர் ஆவார். பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் சன்னதி மட்டும் உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்க சனீஸ்வரர் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் காட்சியளிக்கிறார். சிலையின் மேல்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும், நடுவில் காகமும் உள்ளன.

மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள 'ஷட்கோண யந்திரம்' உள்ளது. இச்சிலையில் 'நமசிவாய' மற்றும் சில மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.சுற்றிலும் வயல்வெளிகள் இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோயில் இது. கோயில் முகப்பில் தேர் ஒன்றை ஐந்து காகங்கள் இழுத்து வருவதும், அதில் சனீஸ்வரர் அமர்ந்திருப்பது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

இதை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். முன் மண்டபத்தில் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். தற்போதும் சனீஸ்வரர் சன்னதியில் மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் அனைத்தும் சனீஸ்வரர் மீது விழும்படியாக சன்னதி அமைந்துள்ளது.

இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு. சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் (காலை 6 - 7.30 மணிக்குள்) அபிஷேகம், கோபூஜை, யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று இவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கும

பாஸ்கர தீர்த்தம் :::

சனீஸ்வரரின் தந்தை சூரியபகவான் இங்கு தீர்த்தமாக இருப்பதாக ஐதீகம். சூரியனுக்கு 'பாஸ்கரன்' என்று பெயருண்டு. எனவே இந்த தீர்த்தத்தை 'பாஸ்கர தீர்த்தம்' என்பர். இந்த தீர்த்தத்தால் தான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சனீஸ்வரருக்கு பாஸ்கர தீர்த்தத்தால், அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருகிறார்கள். இதை பருகுபவர்களுக்கு, சூரியன், சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆரணி சென்று பின், அங்கிருந்து படவேடு செல்லும் பஸ்ஸில் 9 கி.மீ., சென்றால் ஏரிக்குப்பத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு செல்ல ஆரணியில் இருந்து ஸ்பெஷல் பஸ்கள் விடப்படுகின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts