background img

புதிய வரவு

லிபிய மக்களை காக்கும் பணியில் நேட்டோ படைகள்: அதிபர் ஒபாமா

வாஷிங்டன், மார்ச் 29: லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை காக்க அங்கு புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் பணியில் அமர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தெரிவித்தார்.
லிபியா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இது குறித்து மேலும் கூறியது: "ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து மக்களை காக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகள் சிலவும் தங்களது படைகளை அங்கு அனுப்பியிருந்தன.
புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும். கடாஃபி ஆதரவு ராணுவத்தை நேட்டோ படைகள் ஒடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த நடவடிக்கையின்போது உளவு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து மீட்புப் பணி ஆகியவற்றில் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும். லிபிய படைகளை ஒடுக்குவதுடன் நமது பணி முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. லிபியாவில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் உணவு, மருந்துகள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை செய்ய வேண்டும்' என்றார்.
இதனிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, லண்டன் செல்லவுள்ளார். அங்கு முகாமிட்டுள்ள லிபிய எதிர்க் கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். லிபியாவில் மக்கள் விரும்பும் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பாக அவர்களுடன் ஹிலாரி ஆலோசிப்பார் என தெரிகிறது.
லிபிய படைகள் தாக்குதல்: அதிபர் கடாஃபியின் சொந்த ஊரான சிரட்டேவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் ஆதரவுடன் அவர்கள் அந்த நகரைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் விரட்டி மீண்டும் சிரட்டே நகரை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி அறிவித்தது. ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தி கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் பின் வாங்கச் செய்தததாகவும் அது தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts