background img

புதிய வரவு

அணுக்கதிர்வீச்சு பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ/புகுஷிமா, மார்ச் 29: அணுக்கதிர்வீச்சு பரவாமல் தடுக்க ஜப்பான் அரசு அதிகபட்ச எச்சரிக்கையுடன் செயல்படுவதாக அந்நாட்டு பிரதமர் நவ்டோகான் தெரிவித்தார்.
நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையும் ஜப்பானை மிகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளிவிட்டது. சமீப காலங்களில் ஜப்பான் சந்தித்த மிகப் பெரும் துயர சம்பவம் இதுவாகும் என்று குறிப்பிட்ட அவர், இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.
புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலையின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. இது கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது. எனவே அரசு அதிகபட்ச எச்சரிக்கையோடு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். இந்த ஆலையைச் சுற்றி 20 கி.மீ. சுற்றுப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரையும் நிரந்தரமாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலையை நிரந்தமாக மூடிவிட முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அணு உலையின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக அமைச்சரவை தலைமைச் செயலர் யுகியோ எடானோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எரிபொருள் கம்பிகள் மிக அதிக வெப்பத்தில் உருகுவது கவலையளிப்பதாகவும், இதனால் இப்பகுயில் உள்ள மண்ணில் புளூட்டோனியம் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆலையை நிர்வகிக்கும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், மண்ணில் புளூட்டோனியம் பரவியுள்ளதை உறுதி செய்துள்ளது. இருப்பினும் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்வளத்தைக் காப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். புளூட்டோனியம் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதை அளவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் சகே மோட்டோ தெரிவித்துள்ளார். மற்றெந்த கதிர் வீச்சைக் காட்டிலும் புளூட்டோனியம் மிகவும் ஆபத்தானது. அயோடின், சீசியம் உள்ளிட்டவற்றைக் காட்டிலும் இது மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது.
இரண்டாவது அணு உலையிலிருந்து மிக அதிக அளவு கதிர்வீச்சு வெளியேறியுள்ளது. இங்கிருந்து 1,000 மில்லி சீவர்ட் அளவுக்கு பரவியுள்ளது. இதனால் இது தண்ணீரிலும் கலந்துள்ளது. இந்த உலையில் உள்ள எரிபொருள் கம்பி உருகியதால், கதிர்வீச்சு வெளியானது. ஒரு மணி நேரத்துக்கு 1,000 மில்லி சீவர்ட் அளவுக்கு கதிர்வீச்சு காற்றில் பரவினால் அதை சுவாசிக்கும் மனிதனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 30 நிமிஷத்தில் குறைந்துபோகும். இவ்விதம் சுவாசிப்பவர்கள் 30 நாளில் மரணத்தை சந்திக்க நேரும். சிலர் 4 மணிநேரத்தில் உயிரிழப்பர். இரண்டாவது அணு உலைக்கு அருகாமையிலிருந்துதான் மிக அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு பரவியுள்ளது கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அணு உலையின் கீழ் தளத்தில் கதிரியக்க அளவு ஒரு லட்சம் மில்லி சீவர்ட்டாக உள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும்.
1-வது அணு உலையிலிருந்து 320 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளியாவதால் அதைக் குளிர்விக்க தண்ணீரை அனுப்புப் பணியை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால் கதிர்வீச்சு கடல் நீரில் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அணு உலையிலிருந்து கன நீரை வெளியேற்றுவதற்காக கடலில் 55 முதல் 70 மீட்டர் வரையிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் கதிர்வீச்சு கடல் நீரில் பரவுகிறது. இந்த குழாய் வழியே நீர் வெளியேறாமல் தடுத்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கதிர்வீச்சு நிறைந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அணு உலையைக் குளிர்விக்க குளிர்ந்த நீர் அனுப்புவது, அதேசமயம், கதிர்வீச்சு நிறைந்த நீரை வெளியேற்றுவது என இரண்டுவிதமாக கடினமான பணியை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை செயலர் எடானோ குறிப்பிட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts