background img

புதிய வரவு

ஏப்ரல் 2ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை-கனிமொழியும் சேர்க்கப்படுவார்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதை தயாரித்து வருவதாகவும், இதற்கு மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் மிகப் பெரும் அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல் நடந்திருப்பதாகவும், பினாமி பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிபிஐ அளித்துள்ள ஆவணத்திலிருந்து இது புலனாகிறது. எனவே மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் அமலாக்கப் பிரிவு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவர அறிக்கையின்படி இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த காலத்தில் இத்தகைய பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து ரூ. 106.95 கோடி பெறப்பட்டுள்ளது. ஒரே ஒரு பங்குத் தொகைக்காக இந்த அளவு தொகை பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் வெறும் ரூ. 270 ஆக இருந்தபோது இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.

அன்னியச் செலாவணி பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு முதலீடுகள் விவரத்தையும் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அளித்துள்ளது. இந்த முதலீடுகளில் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து வந்தவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்ற பிறகு வெளிநாடுகளில் இருந்து இவை வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இக்குழு மோரீஷசிலிருந்து பணம் வந்த பல்வேறு நாடுகளுக்கும் செல்லும்.

இதேபோல நீரா ராடியா பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவுகள் எழுத்து வடிவில் மாற்றப்பட்டு அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது.

கனிமொழிக்கு ஆபத்து:

இந்த நிலையில் நேற்று ஸ்வான் நிறுவன அதிபர் ஷாஹித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் நெருங்கிய நண்பர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் கனிமொழியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிபதி நியமனம்:

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரகாஷ் சைனி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் யோசனைப்படி இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts