background img

புதிய வரவு

குருபகவான் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் கோவில்

ஸ்தல வரலாறு:

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் செல்லும் வழியில் 10-வது கிலோ மீட்டரில் தற்போது திட்டை என அழைக்கப்படும் தென்குடித்திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிழ்ந்தும் இருந்த பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம் பொருளை பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரின் அருளால் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவு உள்ள ஒரு மேட்டுப்பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த, சாஸ்திர அறிவையும் அருளினார். இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

பிரளய காலத்திலும், பேருழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டைத் தலம். மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரகாந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது அந்தக்கல்.

அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை இப்போதும் இத்தலத்தில் காணலாம்.

சிறப்புகள்:

சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாதித்து வழிபடப்படுகிறார். ஆனால் தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் குரு விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரங்கள்:

ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு. எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்பர். இந்த குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம்.

இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். எனவே குரு பெயர்ச்சி நடைபெறும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் குரு பகவானை தரிசித்து லட்சார்ச்சனை அல்லது பரிகார ஹோமங்களில் பங்கு கொண்டால் நற்பலன்கள் பல பெறலாம் என்பது ஐதீகம்.

இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

8-ந்தேதி குருபெயர்ச்சி விழா:

இந்த ஆண்டு குரு பகவான் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதனைத்தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், கேது பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர்.

ஆதலால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. குரு, ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 12 ராசிக்காரர்களுக்கும் நன்மை பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற மே 19-ந் தேதி (வியாழக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 தினங்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்களும் நடைபெற உள்ளது.

ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். லட்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாட்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அதில் பங்கு கொள்ளலாம்.

நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு ரூ.300 மற்றும் குரு பரிகார ஹோமத்திற்கு ரூ.500 மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து, அத்துடன் தங்களது பெயர், ராசி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றுடன் சரியான முகவரியை எழுதி

நிர்வாக அதிகாரி,
வசிஷ்டேஸ்வரர் கோவில்,
திட்டை,
தஞ்சை மாவட்டம்

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். முன்கூட்டியே பணம் அனுப்புபவர்கள் பெயர்கள் வரிசை முறையில் முன் பதிவு செய்யப்பட்டு உரிய முறையில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04362-252858 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செயல் அலுவலர் கோவிந்தராஜீ கூறியுள்ளார்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts