
மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும் இருந்த இந்த பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டித் துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப் பெருவெள்ளத்தின் நடுவில் பத்து மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி உருவானதைக் கண்டு அவர்கள் வியந்தனர். அந்த மேட்டுப் பகுதியில் ஜோதி மயமான லிங்கத்தை கண்டு பூஜித்தனர்.
இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன், மும்மூர்த் திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து, அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்
தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார். இறைவன் தானாக தோன்றியதால், தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
நவகிரகங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர், குரு பகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக் கடுமையான பாவக் கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக்கூட தனது பார்வையினால் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட பிரகஸ்பதி என்று அனைவராலும் போற்றப்படுபவர் குரு பகவான். எல்லா சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பார். பெரும்பாலான இடங்களில் இந்த தட்சிணாமூர்த்தியே குரு வாகப் பாவித்து வழிபடப்படுகிறார்.
தஞ்சை மாவட்டம், திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை என்கிறார்கள். தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்ப ட்டு வருகிறது. தஞ்சாவூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தென்குடித்திட்டை தலம் அமைந்துள்ளது.
0 comments :
Post a Comment