background img

புதிய வரவு

எகிப்து அதிபர் பதவி விலக கோரி 10 லட்சம் பேர் இன்று பேரணி

கெய்ரோ: எகிப்தில் மக்களின் போராட்டத்தால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி ‘10 லட்சம் பேர் பேரணி’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகின்றன. இதனால், தலைநகர் கெய்ரோவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக், ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டி லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கெய்ரோவின் பிரமாண்ட சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிபர் உடனடியாக பதவி விலகக் கோரி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி விலக மறுத்து வரும் முபாரக், தனது அமைச்சரவையை 2 நாட்கள் முன் டிஸ்மிஸ் செய்தார். புதிய பிரதமராக அகமது ஷபீக்கை நேற்று நியமித்த அவர், புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும், அரசியல் சீர்திருத்தங்களை தொடங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளதாக ஹோஸ்னி முபாரக் தெரிவித்தார். அவரது அறிவிப்பை அரசு தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

ஆனால், முபாரக்கின் இந்நடவடிக்கையை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கெய்ரோவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எனினும், கெய்ரோ சதுக்கத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர். இரவிலும் கடுங்குளிரில் அவர்கள் அங்கேயே தங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியில் எதிர்க் கட்சிகளும் முழுவீச்சில் குதித்துள்ளன. ‘மார்ச் ஆப் மில்லியன்ஸ்’ என்ற பெயரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்துகின்றன. இதனால், எகிப்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. ராணுவத்தைக் கொண்டு கலவரம் ஒடுக்கப்படுமா அல்லது மக்கள் எதிர்ப்புக்கு பணிந்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவாரா என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையே, அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தின் ஒரு பகுதியினரும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எகிப்தில் ராணுவப் புரட்சி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முபாரக்குக்கு எதிராக போராட்டத்தை ஆதரித்து வெளிநாடு வாழ் எகிப்து மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், எகிப்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், எகிப்தில் இருந்து நேற்று மேலும் 380 இந்தியர்கள் நாடு திரும்பினர். எகிப்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts