background img

புதிய வரவு

"கத்துக்குட்டியிடம்' கவிழ்ந்தது ஏன்? * இங்கிலாந்து "மீடியா' கடும் விமர்சனம் * அயர்லாந்தில் வெற்றி கொண்டாட்டம்

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் கத்துக்குட்டி அயர்லாந்திடம் வீழ்ந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். படுமோசமான "பீல்டிங்' மற்றும் சரியான வியூகம் அமைக்காததே இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அணியின் சொதப்பலான ஆட்டத்தை, அங்குள்ள "மீடியா' கடுமையாக விமர்சித்துள்ளன. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, அயர்லாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
பெங்களூருவில் நேற்று முன் தினம் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மிகப் பெரும் அதிர்ச்சி அளித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை குவித்த போதும், வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.
பீல்டிங் மோசம்:
இப்போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரை இங்கிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்த தவறினர். சுவான் தவிர மற்றவர்கள் மோசமாக பந்துவீசினர். தவிர, பீல்டிங்கும் படுமட்டமாக இருந்தது. நான்கு முக்கிய "கேட்ச்' வாய்ப்புகளை வீணாக்கினர். கெவின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, கேப்டன் ஸ்டிராசே கோட்டை விட்டார். பேட்டிங்கில் 300 ரன்களை கடந்ததும், இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்தனர். கடைசி 5 ஓவரில் வெறும் 33 ரன்கள் தான் எடுத்தனர். 327 ரன்களை அயர்லாந்து அணியால் எடுக்க இயலாது என்று தப்புக்கணக்கு போட்டனர். ஆனால், கெவின் ஓ பிரையனின் அசத்தல் ஆட்டம் அயர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தது.
இத்தோல்வியை இங்கிலாந்து "மீடியா' கடுமையாக விமர்சித்துள்ளது. "" இங்கிலாந்துக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார் கெவின்; இவரது அதிரடி ஆட்டத்துக்கு முன், ஏதோ கிளப் அணி போல இங்கிலாந்து காட்சி அளித்தது,''என்று "சன்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
"தி டெலிகிராப்' வெளியிட்டுள்ள செய்தியில்,""சமீப காலமாக இங்கிலாந்தின் தேசிய விளையாட்டான கிரிக்கெட், தோல்விப் பாதையில் பயணிக்கிறது,''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.சி., செய்தியாளர் ஜோனாதன் ஆக்னியு கூறுகையில்,"" இத்தோல்வியில் இருந்து இங்கிலாந்து மீள்வது கடினம். காலிறுதியை கடப்பதற்கு வாய்ப்பு இல்லை,''என்றார்.
பிரதமர் பாராட்டு:
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இம்முறை பரம எதிரியான இங்கிலாந்தை வென்று, புதிய வரலாறு படைத்துள்ளது. மகத்தான வெற்றி பெற்ற அயர்லாந்து வீரர்கள் புதிய "ஹீரோக்களாக' வலம் வருகின்றனர். அயர்லாந்தின் பிரதமராக உள்ள எண்டா கென்னி கூறுகையில்,""அயர்லாந்து அணியினர் மிகுந்த துணிச்சலாக ஆடினர். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்துள்ளனர். இந்த வெற்றி மக்களுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது,''என்றார்.
------------
கெவின் ஐ.பி.எல்., கனவு
அதிவேக சதம் அடித்த அயர்லாந்தின் வெற்றி நாயகன் கெவின் ஓ பிரையன் கூறுகையில்,""இங்கிலாந்தை எந்த ஒரு போட்டியில் வீழ்த்தினாலும், அது அயர்லாந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். எனது ஆட்டம் "டுவென்டி-20'க்கு ஏற்றது என்கின்றனர். பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாட யாருக்கு தான் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆர்வம் உண்டு,''என்றார்.
---------------
ஸ்டிராஸ் புலம்பல்
இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில்,""தோல்வி பற்றி விளக்கம் அளிக்க முடியாத நிலையில் உள்ளேன். நான்கு "கேட்ச்' வாய்ப்புகளை தவற விட்டதால், சிக்கல் ஏற்பட்டது. ஒரு பேட்ஸ்மேன் கொடுக்கும் "கேட்ச்' வாய்ப்பை வீணாக்கினால், அதற்கு பின் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது கடினம். எங்களது உலக கோப்பை கனவு இன்னும் முடிந்து விடவில்லை,''என்றார்.
-----------
ஐ.சி.சி.,க்கு கோரிக்கை
அயர்லாந்து கேப்டன் போர்டர்பீல்டு கூறுகையில்,""அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி.,முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. தகுதிச் சுற்று போட்டிகள் வைத்து அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானை காட்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக வென்றதே சிறப்பானது. இம்முறை மிகப் பெரும் இலக்கை சேஸ் செய்து காட்டியுள்ளோம்,''என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts