background img

புதிய வரவு

அணு உலை வெடித்தது: ஜப்பானில் அச்சம்

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில், நேற்று காலையில் மூன்றாம் எண் அணு உலை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் எண் அணு உலையில், "கோர்' எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஜப்பான் மிக மோசமான அணு கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புக்குஷிமா டாய் இச்சியில் ஆறு உலைகளும், டாய் இனியில் நான்கு உலைகளும் செயல்படுகின்றன. டாய் இச்சியில் ஒன்றாம் எண் அணு உலை, கடந்த 12ம் தேதி வெடித்தது. அதையடுத்து, மூன்றாம் எண் அணு உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன.தொடர்ந்து, உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக, போரிக் அமிலம் கலந்த கடல் நீர் அதிகளவில் உலைக்குள் செலுத்தப்பட்டது. ஆனால், நீர் செலுத்தப்படும் வேகத்தை விட வெப்பம் பல மடங்கு வேகமாக அதிகரித்தது. இதனால், உலை எந்நேரமும் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.நேற்று காலை ஜப்பான் நேரப்படி 11 மணியளவில், உலையின் வெளிப்புறச் சுவர் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மற்ற 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சரவை தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, "அணு உலை மற்றும் அதன் உட்புற சுற்றுச்சுவர் ஆகியவை எவ்வித சேதமும் அடையவில்லை. காற்றில் கலந்த கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது' என்று தெரிவித்தார்.

அதேநேரம், காற்றின் திசையால், கதிர்வீச்சு, புக்குஷிமாவுக்கு வடக்கில் உள்ள ஒனகாவா அணு மின் நிலையம் வரை பரவியது. இதனால், ஒனகாவா நிலையத்தில் அணு மின் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புக்குஷிமாவில் இருந்து 160 கி.மீ., தொலைவு வரை கதிர்வீச்சு கசிந்திருப்பது கண்டறியப்பட்டது.இந்த அணு உலை வெடிப்புகளால் ஏற்படும் பாதிப்பு எந்தளவில் இருக்கும் என்பது குறித்து, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய அணுசக்தி நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.ஆபத்தில் இரண்டாம் எண் அணு உலை: இதற்கிடையில், டாய் இச்சியின் இரண்டாம் எண் அணு உலையில் நேற்று குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதனால், உலையில் வெப்பம் அதிகரித்து, "கோர்' கம்பிகள் பாதிக்கு மேல் உருகியதாகத் தகவல்கள் வெளியாயின.

வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, வெளியில் இருந்து நீர் உள்ளே செலுத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இரண்டாம் எண் அணு உலைக்கான நிபுணர்கள், ""கோர்' கம்பிகள் உருகின என்ற செய்தியைப் புறக்கணிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த இரண்டு வெடிப்புகளில், அணு உலையில் வெப்பம் அதிகரித்ததால், ஹைட்ரஜன் வாயு உருவாகி, அது வெளியில் உள்ள இரண்டாம் நிலை சுற்றுச்சுவரை தகர்த்து வெளியே வந்திருக்கிறது.இச்சம்பவத்தில், முதல் நிலைச் சுற்றுச்சுவர் சேதம் அடையவில்லை.ஆனால், இரண்டாம் எண் உலையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும், "கோர்' கம்பி எனப்படும் அணு மின் உற்பத்திக்கான மூலப்பொருள் உருகி விழும் நிகழ்ச்சி, மிகப் பெரும் விபரீதத்தையும். நீண்ட காலத்துக்கு மோசமான விளைவையும் ஏற்படுத்தும்.இரு உலைகளில் இருந்து கதிர்வீச்சு கலந்த நீர் மற்றும் நீராவி வெளியேற்றம் பல மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்குமென, ஜப்பானிய, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் கருதுகின்றனர்.

பீதியில் உலக நாடுகள்: இதுவரை மின்சார உற்பத்திக்கு அணு மின் உலை கட்டுமானத்தைப் பரிந்துரை செய்த நாடுகள் எல்லாம் இப்போது ஜப்பானில் அணு மின் உலையின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை அடுத்து பீதியில் ஆழ்ந்துள்ளன. பின்லாந்து நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து அணு மின் உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. மிக விரைவில் அடுத்த அணு மின் உலை ஒன்று நிறுவத் திட்டமிட்டிருந்த சுவிட்சர்லாந்து, அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தன் பகுதியில் அணு கதிர்வீச்சு அபாயம் வராமல் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts