background img

புதிய வரவு

காங்கிரஸ் 63 தொகுதிகளுக்கு ஒரே நாளில் 600 பேர் விருப்ப மனு

சென்னை : தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஒரே நாளில் 600 மனுக்கள் சத்தியமூர்த்தி பவனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சீட் கேட்டு குவிந்ததால், கட்சியினர் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் தங்கபாலு அறிவித்தார். பொதுத் தொகுதிக்கு 5,000 ரூபாய், தனித் தொகுதிக்கு 2,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் அரங்கத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நீண்ட கியூவில் நின்று படிவங்களை கட்சியினர் பெற்றுக் கொண்டனர். மயிலாப்பூர் தொகுதிக்கு கராத்தே தியாகராஜன், ஆலந்தூர், தி.நகர், ஆவடிக்கு எஸ்.டி.நெடுஞ்செழியன், அண்ணா நகருக்கு ஜி.ஆர்.கதிரவன், ருக்மாங்கதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆவடிக்கு ஐஸ் அவுஸ் தியாகு, பொன் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு யுவராஜா, வாசுதேவநல்லூருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகன் தங்கை கணேசன், ராயபுரத்திற்கு மனோ, பாலசந்தானம், விருத்தாசலத்திற்கு மெய்யப்பன், கிருஷ்ணகிரிக்கு சுகந்தன், ஆலந்தூருக்கு கத்திப்பாரா ஜனார்த்தனம், ராமநாதபுரத்திற்கு கரு சுப்பிரமணியம், ஆம்பூருக்கு ஹசீனா சையத், வெங்கட், மயிலாப்பூருக்கு எஸ்.வி.சேகர், மங்கள்ராஜ், அசோக்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
தி.நகருக்கு சேம.நாராயணன், வக்கீல் சத்தியமூர்த்தி, முக்தா சீனிவாசன், ஆத்தூருக்கு உலகநம்பி ஆகியோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அறந்தாங்கி தொகுதியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிடுவதற்கு வக்கீல் சிவராஜசேகரனும், தி.நகர் தொகுதிக்கு செல்லக்குமார் போட்டியிடுவதற்கு எஸ்.எம்.குமார், முனீஷ்வர கணேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு மத்திய அரசு வக்கீல் மோகன்தாஸ் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
கட்சியினர் வாகனங்கள் சத்தியமூர்த்தி பவன் வெளியே நிறுத்தப்பட்டதால், ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மனு வாங்கும் இடத்திலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், கட்சியினர் நெரிசலில் சிக்கித் தவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, 63 தொகுதிகளுக்கு போட்டியிடுவதற்கு 600 மனுக்கள் குவிந்தன. விருப்ப மனுவில், சிறை சென்ற அனுபவம், வெற்றி வாய்ப்புக்கான விவரங்கள், இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுவை பெறும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறும்போது, ""புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும். விருப்ப மனுக்களை ஆய்வு செய்து, வெற்றி பெறக்கூடிய சிறப்பான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வேட்பாளர் பட்டியலை தேர்வுக் குழு இறுதி செய்து, சோனியா ஒப்புதலுடன் வெளியிடப்படும்,'' என்றார்.
தந்தை, மகன் ஒரே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு : முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளருமான குமாரதாஸ், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மகன் கே.வி.தேவ், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். தந்தையும், மகனும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால், யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"புது நெல்லு புது நாத்து' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இவர், சமீபத்தில் டில்லியில் மத்திய அமைச்சர் வாசன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் பேரவைக்கு மாநிலச் செயலர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அவரும் நிலக்கோட்டை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தார்.
சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கோவை தங்கம் வால்பாறைக்கும், ஞானசேகரன் வேலூருக்கும், விடியல் சேகர் காங்கேயத்திற்கும், விஷ்ணு பிரசாத் செய்யாறுக்கும், ராணி வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டத்திற்கும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts