background img

புதிய வரவு

அதிமுக அரசில் 34 அமைச்சர்கள்: சென்னை பல்கலை. அரங்கில் இன்று பதவி ஏற்பு

சென்னை, மே 15: மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரைச் சந்தித்தார்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஆளுநர்.

இதன்பின், ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோரினார் ஜெயலலிதா. கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் கூடிய கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதன்பின் புறப்பட்டுச் சென்றார்.
இன்று பதவி ஏற்கிறார்: ஜெயலலிதாவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்கிறது. 33 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான துறைகளும் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
"சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும்' என தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுக அணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் இன்று சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை சென்னை வருகிறார். அப்போது, அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசிக்கிறார்.

அனைவருக்கும் விருந்து: பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலையில் பணிகளை கவனிக்கிறார்: பதவியேற்ற பிறகு, திங்கள்கிழமை மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் அவர் வந்து பணிகளைக் கவனிப்பார் என்றும், அவருடன் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களும் வருவார்கள் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளுக்கும் புதிய செயலாளர்கள், ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை முதல் வெளிவரக் கூடும் எனத் தெரிகிறது.மின்வெட்டில்லா தமிழகம்
"தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்படும்' என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கோரினார். பின்னர், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

முதல்வராக பொறுப்பேற்றதும் எந்த விவகாரங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள்?
தமிழகம் இருண்ட காலத்துக்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுப்பது எங்களது முக்கிய பொறுப்பு. முதலில் சட்டம்-ஒழுங்கினை சரி செய்வோம். மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியை மக்கள் எப்போதுமே மிகவும் பாதுகாப்பாக உணருகிறார்கள். அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடையச் செய்வோம்.
தில்லிக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அடுத்த மாதம் தில்லி செல்ல வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதே?
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது. இதனால், மக்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவர்.

தமிழக அமைச்சர்கள் பட்டியல்
  1.  ஜெயலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்,அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.
  2. ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை
  3. கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை
  4. நத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை
  5. கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை
  6. சி.சண்முகவேலு---தொழில் துறை
  7. ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை
  8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை
  9. சி.கருப்பசாமி---கால்நடைத் துறை
  10. பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை
  11. சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை
  12. செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை
  13. கே.டி.பச்சமால்---வனத் துறை
  14. எடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
  15. எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.
  16. கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.
  17. எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.
  18. கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.
  19. எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.
  20. பி.தங்கமணி---வருவாய்த் துறை.
  21. ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.
  22. எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.
  23. செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.
  24. பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.
  25. ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.
  26. என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
  27. வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.
  28. என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.
  29. கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.
  30. இ.சுப்பையா---நீதித் துறை.
  31. புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.
  32. எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை
  33. வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.
  34. என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts