background img

புதிய வரவு

கடாபியை அழிக்கும் நோக்கம் : அமெரிக்காவுக்கு எதிர்ப்பு

பெங்காசி : அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல' என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை' தீர்மானத்தை அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன.

தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா' என்ற கடாபியின் ராணுவ வளாகத்தின் மீது நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரிபோலியின் புசட்டா கடற்படை தளம் நேற்று நடந்த ஏவுகணை தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. டிரிபோலியில், கூட்டுப் படை விமானங்கள் மீது கடாபி ராணுவம், பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியது. ஜூவாரா, சிர்ட், பெசா, ஜின்டான் மற்றும் அஜ்தாபியா ஆகிய நகரங்கள் மீதும் அமெரிக்கக் கூட்டுப் படை போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின.

அமெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் ஒன்று நேற்று லிபியாவில் விபத்துக்குள்ளானது. எந்தப் பகுதியில் விமானம் விழுந்தது என்பது தெரியவில்லை. இவ்விபத்து, விமான கோளாறால் ஏற்பட்டது என்று கூறிய அதிகாரிகள், விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மிஸ்ரட்டா நகருக்குள் நேற்று புகுந்த கடாபி ராணுவம், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது. இதில் ஒரு காருக்குள் பதுங்கியிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 49 அப்பாவிகள் பலியாகினர். கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் அங்கு கடும் மோதல் நடந்து வருகிறது.

தாக்குதல் குறைகிறது: அமெரிக்காவின் ஆப்ரிக்க படைப் பிரிவு தளபதி ஜெனரல் கார்ட்டர் எப். ஹாம் கூறியதாவது: கடாபியின் ராணுவ மைய கட்டுப்பாட்டை குலைத்து மக்களைக் காப்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதோ, கடாபியை ஆட்சியை விட்டு நீக்குவதோ நோக்கம் அல்ல. எங்கள் தாக்குதல் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.இவ்வாறு ஹாம் தெரிவித்தார்.

ஒபாமாவுக்கு எதிர்ப்பு: லிபியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு, இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஆப்ரிக்க யூனியன் என பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பு வெளிப்பட்டு வரும் நிலையில், தற்போது அமெரிக்காவிலேயே ஒபாமாவின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒபாமாவின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர், "பார்லிமென்டை கலந்தாலோசிக்காமல், லிபியா மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா கலந்து கொள்ளும் என்று ஒபாமா எடுத்த முடிவு அவரது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது' என்று விமர்சித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts