background img

புதிய வரவு

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மனுதாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாரதீய ஜனதா கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக நேற்றே அவர் திருவாரூர் சென்றார்.

மாலையில் அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினார்கள்.இன்று காலை சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட கருணாநிதி காலை 10 மணிக்கு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் முதல்-அமைச்சரின் துணைவியார் தயாளுஅம்மாள், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க. அழகிரி, டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி., அமிர்தம், முரசொலி செல்வம், செல்வி, மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு காலை 11.40 மணிக்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாலையில் நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts