background img

புதிய வரவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!

சென்னை: ஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நான்கரை மணி நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார்.

ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் களைப்பாக காணப்பட்டார். இந்த நிலையில், அவர் நடிக்கும் 'ராணா' படத்தின் படப்பிடிப்பு , சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று காலை தொடங்கியது.

ரஜினிகாந்த் 'மேக்கப்'புடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிடுவது போன்ற காட்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முதலில் படமாக்கினார். அதன்பிறகு ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர், கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் மும்பை நடன அழகிகள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் படமாக்கப்பட்டது.

வாந்தி

காரில் ஏறி சென்ற ரஜினிகாந்த் வழியில், பட அதிபர் ஏவி.எம்.சரவணன் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 12-30 மணி வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி

உடனடியாக பிற்பகல் 1-45 மணி அளவில் அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.

சில நிமிடங்களில், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவர் கூறுகையில், "அவர் நன்றாக இருக்கிறார். காலையில், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்திருக்கிறது. அஜீரணம் காரணமாக இங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார்," என்றார்.

ரஜினிகாந்துக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை பற்றி டாக்டர் கிஷோர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர் வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருடைய நாடி துடிப்பு சீராக உள்ளது. ரத்த அழுத்தமும், சுவாசமும் சீராக உள்ளன. பயப்படும்படி ஒன்றும் இல்லை", என்றார்.

டிஸ்சார்ஜ் ஆனார்

மாலை 6-15 மணி அளவில் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்தபோது, பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி, போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts