background img

புதிய வரவு

தமிழ்நாடு முழுவதும் கன மழை: குன்னூரில் வீடு இடிந்து 2 குழந்தைகள் பலி

சென்னை: கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் பலத்த மழையால் கருங்கல் சுவர் இடிந்து வீடு மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமாகி 2 குழந்தைகள் பலியாயினர்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் அதிக அளவான 10 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 8 செ.மீ., குன்னூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. பட்டுக்கோட்டை, செங்கோட்டை, தென்காசி, கரூர், ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும், ஆயக்குடி, பேராவூரணி, திருமங்கலம் ஆகிய இடங்களில் சராசரியாக 4 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.

இது தவிர தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதுமே ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் உள் பகுதியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

கோடை காலத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யும். எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த மரத்தின் கீழேயோ, பரந்த சமவெளி பகுதிகளிலோ நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

குன்னூரில் வீடு இடிந்து குழந்தைகள் பலி:

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் நேற்றிரவு 7குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

மவுண்ட் பிளசண்ட் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரமேஷ் என்பவர் வீட்டின் மீது இரவு 9.45 மணி அளவில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட 30 அடி உயர தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் வீடு தரை மட்டமானது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் இடிபாடுகளை அகற்றினர்.

அங்கே ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமேஷின் மனைவி கவிதா, அவரது உறவினர் ஆகியோரை மீட்டனர். ரமேஷின் மகள்கள் சுவிக்மி (6), சைனி (4) ஆகியோர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று கவிதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கவிதாவின் கணவர் ரமேஷ் டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

குற்றாலத்தில் பலத்த மழை-மரங்கள் முறிவு:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பலத்த மழையால் 5 மின் கம்பங்கள் சாய்ந்தன. சிற்றருவியில் மரம் முறிந்து விழுந்தது.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை வெயில் வறுத்தெடுத்தது. திடீரென மாலை வானில் கருமேக கூட்டம் சூழ்ந்து சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவு சுமார் 7 மணி அளவில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. காலை ஐந்தருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பலத்த காற்று மழையால் நன்னகரம் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சிற்றருவி அருகில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது.

நெடுஞ்சாலை துறையினர் இதனை அகற்றினர். மேலும் குற்றாலம் பகுதியில் 5 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் 3 சிமிண்ட் மின்கம்பங்கள், 2 இரும்பு மின்கம்பங்கள் ஆகும். இதனால் அதிகாலை 3 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts