background img

புதிய வரவு

கனிமொழி விவகாரம்: திமுக உயர் நிலைக் கூட்டம் தொடங்கியது-முக்கிய முடிவு?

சென்னை: கனிமொழியின் பெயரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சேர்த்துள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இதில் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி தருவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

இன்று என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா உள்ளிட்ட சில வழக்கமான முடிவுகளை திமுக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரச்சனையை திமுக கையில் எடுக்கும்?:

இந் நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் போர்க் குற்றமே என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இது குறித்தும் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசுக்கு நெருக்கடி தரும் வேலைகளை திமுக தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts