background img

புதிய வரவு

நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்:கே.வி.தங்கபாலு

சட்டசபை தேர்தலுக்கு முன்பும், பின்பும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மீது குற்றச்சாட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அனேகமாக தமிழகத்தில் அதிகளவில் எரிக்கப்பட்ட உருவ பொம்மை அவருடையதாகத்தான் இருக்கலாம் என்கிற அளவுக்கு, காங்கிரசில் அவருக்கு எதிராக அதிருப்தி தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தங்கபாலு அளித்த "விறுவிறு' பேட்டி:

நீங்கள் தலைவர் பொறுப்பை ஏற்றப்பின் நடந்து முடிந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிக தொகுதிகளை கேட்டீர்கள். இருப்பினும் வேட்பாளர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறதே?

தங்கபாலு என்ற தனிப்பட்ட ஒருவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு பரிந்துரை செய்து கொடுத்த பட்டியலில், ஒரு பெயரையும் விடாமல், அகில இந்திய தேர்தல் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார், எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்வுக் குழுவினரை சந்தித்தனர்.அந்த குழு விவாதித்து பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழுவிடம் சமர்பித்தது. அக்குழுவில் இடம்பெற்ற சோனியா, பிரதமர், பிரணாப் முகர்ஜி, அகமது படேல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.வாசனுக்கும் 23 வேட்பாளர்களும், சிதம்பரத்திற்கு 10 முதல் 15 வரை வேட்பாளர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., சிறுபான்மை துறையின் பரிந்துரையும் அந்த பட்டியலில் இடம் பெற்றது. வேட்பாளர் பட்டியல் என் விருப்பப்படிதான் முடிவு செய்யப்பட்டது என்றால், 63 வேட்பாளர்களும் எனது ஆதரவாளர்களாக தான் இருந்திருப்பர். கட்சிக்காக சிறை சென்றவர்களுக்கும், பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உள்ளோருக்கும் தான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததில் எனக்கும் வருத்தம் உள்ளது. பட்டியலை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டும் அல்ல; எந்த மாநில தலைவருக்கும் கிடையாது. தனிப்பட்ட தங்கபாலுவை விட காங்கிரஸ் கட்சிதான் எனக்கு முக்கியம்.

தேர்தல் முடிந்ததும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினீர்கள். எந்த அடிப்படையில் அவர்களை நீக்கினர்?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சிலரை தான் நீக்கினேன். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன்; எச்சரிக்கை விடுத்தேன். வேட்பாளர்கள் கொடுத்த கடிதத்தின் படி தான், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்களை நீக்க மாநில தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செய்தித் துறை தலைவர் ஜனார்தன திரிவேதியும் எனது அதிகாரத்தை உறுதிச் செய்துள்ளார். உட்கட்சி விவகாரத்தை உள்ளரங்கிற்குள் தான் பேச வேண்டும். என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு களை கூட கடிதம் மூலமோ, நேரிலோ அல்லது அமைப்பு ரீதியான முறையில் தான் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதுகூட கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் தான். அதனடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்?

மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கும், சாதனைகளுக்கும் வெற்றி கிடைக்கும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீண்டும் நல்லாட்சியை வழங்கும்.

மயிலாப்பூர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எனது வெற்றி உறுதிச் செய்யப்பட்டு விட்டது. சோனியா, ராகுல், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால், எனது தொகுதிக்கு மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு போகவில்லை. நான் திடீர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டேன். கட்சியின் கட்டளைப்படி நான் வேட்பாளராக போட்டியிட்டேன். எனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் மூலம், தொகுதிக்கு நன்மை செய்ய முடியுமென மக்கள் தீர்மானித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

உங்கள் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து உங்கள் கருத்து?

வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பெயர் இருப்பதாக, வேளச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், தேர்தல் அன்று என் பெயர், என் மகள் பெயர் மட்டுமே இருந்தது. மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தும் அவரால், ஓட்டுப்போட முடியவில்லை. இது எனக்கு எதிராக நடந்த சதி. இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மனைவிக்கு முதலில் சீட்டு பிரச்னை. பிறகு ஓட்டுப் பிரச்னை. "ஆல் இன் தி கேம்'

உங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறதே?

அவர்கள் உண்மையான கட்சிக்காரர்களே அல்ல; சமூக விரோதிகள் நடத்தும் நாடகம். போட்டோவிற்காகவும், விளம்பரத்திற்காகவும் செய்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் உங்களை மாற்ற வேண்டுமென சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளார்களே?

அரசியல் என் தொழில் அல்ல. தலைவர் பதவியை நான் தேடி போகவில்லை. சேலத்தில் எம்.பி.,யாக இருந்தபோது, எனக்கு டில்லியிலிருந்து திடீரென போன் வந்தது. நீங்கள் தான் தலைவர் என்றார்கள். பதவியை ஏற்றுக் கொண்டேன். கொடுத்தப் பணியை சிறப்பாக செய்கிறேன்.நான் தலைவராக பொறுப்பேற்ற பின் 70 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக எனது ஆதரவாளர்கள் தான் சேர்த்தனர். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

இலங்கை அரசுக்கு எதிராக திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு என்ன காரணம்?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts