background img

புதிய வரவு

நாட்டிலேயே மோசமாக ஆளப்படும் மாநிலம் மேற்கு வங்காளம்தான்; ப.சிதம்பரம்

நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலம், மேற்கு வங்காளம்தான் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில சட்டசபை 3வது கட்ட தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீண்ட காலமாக, ஆட்சி முறையில் அலட்சியம் காட்டி வரும் அரசு, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலமாக மேற்கு வங்காளம் இருக்கிறது. நமது உடனடி கவலை, சட்டம் ஒழுங்கு பற்றியதுதான்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக, கடந்த நான்கு மாதங்களாகவே, நான் மேற்கு வங்காள முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் அவருடைய சகாக்களுக்கு அறிவுறுத்தி வந்தேன். ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை மறுத்து வந்தார். ஆனால், நேடாய் கிராமத்தில் 9 பேர் பலியான பிறகு உண்மை நிலவரம் அம்பலமாகிவிட்டது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை கொள்முதல் செய்து, அதன்மூலம் வன்முறையை பரப்பி வருகிறார்கள். மாநிலத்தையே கொலைக்களமாக்கி விட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.

மாநிலத்தின் நிதி நிலைமையும் அபாயகரமாக உள்ளது. கடந்த 2004 ம் ஆண்டுக்கு பிறகு, எல்லா மாநிலங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. அதன்பிறகு, எந்த மாநிலமும் வங்கியில் உள்ள இருப்புக்கு மேல் பணம் எடுத்தது இல்லை.

ஆனால், மேற்கு வங்காள மாநில அரசு, கடந்த நிதியாண்டில் மட்டும், 7 தடவை அதுபோன்று பணம் எடுத்துள்ளது. இந்த நிதியாண்டிலும் ஒருதடவை பணம் எடுத்துள்ளது. இது, கடனில் தவிக்கும் மாநிலங்களில் ஒன்று. வரி மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் குறைவாக உள்ளது.

குஜராத் கலவர சம்பவங்கள் தொடர்பாக, நரேந்திர மோடிக்கு எதிராக, ஒரு போலீஸ் அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இது நல்ல முன்னேற்றம். இத்தகைய குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக உலா வந்தபோதிலும், இப்போதுதான் தைரியமாக பேச தொடங்கி உள்ளனர் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts