background img

புதிய வரவு

சேறு வாரி இறைத்த கட்சிகளின் தீவிரபிரசாரம் முடிகிறது: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளில் அதிருப்தி

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இதையடுத்து, வெளிநபர்கள் அனைவரும் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். தமிழகத்தில் இரு முக்கிய அணிகள் தரப்பிலும் மாறி மாறி சேறு வாரி இறைத்த நிலையில், தற்போது தேர்தல் கமிஷன் மீது கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது.எனவே, இடைப்பட்ட 14 நாட்களில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இது தவிர, பிரதான இரண்டு கூட்டணிகளிலும் ஸ்டார் பிரசாரகர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, இரு தரப்பிலுமே மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டு, சேறு வாரி இறைக்கப்பட்டன. இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவு தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க., அணியினரும், அ.தி.மு.க., அணியினரும் மேற்கொண்டனர். தற்போது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான தலைவர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இதன் பின், கூட்டம் நடத்தியோ, மைக் மூலமாகவோ யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. எனினும், வீடு வீடாகச் சென்று அமைதியாக ஓட்டு சேகரிக்கலாம். தொகுதியில் வாக்காளராக இல்லாத எவரும் அந்த தொகுதிக்குள் இருக்கக்கூடாது. லாட்ஜ்கள், மண்டபங்கள் போன்றவற்றில் சம்பந்தமில்லாதவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலுமே ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பெரும்பாலும் வெளிநபர்கள் தொகுதிக்குள் இருக்க வாய்ப்பில்லை. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேண்டுமானால், வேறு தொகுதி கட்சிக்காரர்கள் இருக்கலாம்.பிரசாரம் முடியும் நிலையில், பணப் பட்டுவாடாவில் முக்கிய கட்சிகள் கவனம் செலுத்தலாம் என்பதால், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சில நாட்களாக, இரவு நேரத்தில் மின் தடையை ஏற்படுத்தி, பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் வந்துள்ளன.

முன்கூட்டியே அறிவிக்காமல், மின் தடை ஏற்படுத்தக் கூடாது என மின் வாரியத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊழியர்களை கவனித்து, மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கு ஏற்ப, ஓட்டுச் சாவடிகளுக்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் நாளை அனுப்பி வைக்கப்படும்.தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக, தீவிர பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே, 200 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். இன்று மேலும் 40 கம்பெனி படையினர் வருகை தர உள்ளனர்.

"டாஸ்மாக்' மதுபானக் கடைகள் மற்றும் தனியார் பார்கள் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகின்றன. வரும் 13ம் தேதி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும்; 14ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும்.பிரசாரம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர், தேர்தல் கமிஷனின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். பணப் பட்டுவாடாவையும், பரிமாற்றத்தையும் தடுக்கவில்லை என்று அ.தி.மு.க., தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் விமர்சனம் மற்றும் எஸ்.எம்.எஸ்., பிரசாரம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை என்று தி.மு.க., தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் தன் அதிகாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதாக முதல்வர் கருணாநிதி தெளிவாக குற்றம் சாட்டியுள்ளார். அதே சமயம் தலைமைத் தேர்தல் கமிஷனர், "தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலான பணி' என்று குறிப்பிட்டது இதுவரை கூறப்படாத புகாராகும். மேலும், அதிக அளவில் கணக்கில் காட்டப்படாத பணம் தமிழகத்தில் பிடிபட்டிருக்கிறது என்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்திருப்பது அதிர்ச்சி தகவலாகும். பீகாரை விட அதிக கெடுபிடியுடன் தேர்தலை நடத்த கமிஷன் முன்வந்திருப்பதால், ஓட்டுப்பதிவு முடியும் வரை அதிக பரபரப்பு புகார்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts