background img

புதிய வரவு

கரூர், காரைக்குடியில் ராகுல்காந்தி இன்று பிரச்சாரம்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ராகுல்காந்தி கோவை வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.



அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜை ஆதரித்து பேசுகிறார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். அவரது ஹெலிகாப்டர் பிற்பகல் 2 மணி அளவில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும்.

அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக் கூட்டம் நடக்கும் கரூர் திருவள்ளூர் மைதானத்துக்கு செல்கிறார். கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணியை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்கிறார்.

அதே மேடையில் அரவாக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ண ராயபுரம் தி.மு.க. வேட்பாளர் காமராஜ், குளித்தலை தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு செல்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ராமசாமி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் காமராஜ் ஆகியோருக்காக ராகுல் பிரசாரம் செய்வார்.

காரைக்குடி பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி மதுரைக்கு வந்து இரவு தங்குவார் என்று முதலில் தகவல் வெளியானது.

தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி கூட்டம் முடிந்ததும், காரைக்குடியில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விளாத்திக்குளம் கூட்டம் முடிந்ததும் மதியம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முத்து குமாரசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மதியம் 1 மணியளவில் புதுவை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் மடுகரை செல்கிறார்.

மடுகரையில் இருந்து கார் மூலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை வழி நெடுகிலும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மடுகரையில் தொடங்கி கரியமாணிக்கம், சூரமங் கலம், மதகடிப்பட்டு, அரியூர், பங்கூர் வழியாக வில்லியனூர் வருகிறார்.

வில்லியனூரில் கண்ணகி பள்ளி அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, ராஜ்ய சபா எம்.பி.கண்ணன், முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி விக்டோரியா, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமரன், பொது செயலாளர்கள் சாம்ராஜ், இளையராஜா, ராமமூர்த்தி, அருள் டோம் னிக், சத்தியவேந்தன், மோகனா, செந்தில்வடிவு மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்து சுல்தான் பேட், மூலகுளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்கு பார்க் வழியாக ராகுல்காந்தி லாஸ் பேட்டை விமான தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திக்குளம், புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் சுமார் 500 போலீசார் ராகுல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். காரைக் குடியில் ராகுல் தங்கும் இடம் மத்திய தொழில் பாது காப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts