background img

புதிய வரவு

தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி

சென்னை: ""தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்,'' என, சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா உறுதியளித்தார்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சென்னை தீவுத்திடலில், நேற்று மாலை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவேற்றார். காங்கிரஸ் தலைவி சோனியா பேசியதாவது:தமிழகம் இன்று, முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நெல், கரும்பு, பருத்தி, தேயிலை ஆகியவை உற்பத்தியிலும், ஜவுளித்துறை, ஆட்டோ மொபைல், ஐ.டி., மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மதிய உணவுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், திருமண உதவித் திட்டம், அங்கன்வாடி குழந்தைகளுக்கான திட்டம், மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்டம், முதியோருக்கான ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆதிதிராவிட மக்களுக்கு உதவும் வகையிலும், மத நல்லிணக்கத்தை, ஒற்றுமையை பேணும் வகையிலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் இத்தகைய திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றும் வகையில், அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

இத்தகைய திட்டங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 9 ஆயிரத்து 675 கோடி ரூபாயிலிருந்து, 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி, மிக அனுசரணையாக இருந்துள்ளது. ஐந்தாண்டுகளாக இந்த அரசு, கொடுத்த வாக்குறுதிகளை, சாதனைகளை கருத்தில் கொண்டு, சென்ற முறை நீங்கள் ஓட்டளித்தீர்கள். இந்த முறை கருணாநிதி அரசின் சாதனைகள் தொடர நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன் வைத்தே நான் உங்கள் முன் நிற்கிறேன். வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கை. தி.மு.க.,வும் அதே கொள்கையை கொண்டிருப்பதால், இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மத்திய - மாநில அரசுகள் இணைந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் அது போன்ற நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெறவும், அவர்கள் மறு வாழ்விற்காகவும், புனரமைப்பு பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும் செய்து வருகிறது. அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக மத்திய அரசு உதவியுள்ளது. அத்துடன் இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்காக இலங்கை அரசின் விதிமுறைகளையே மாற்றிட நடவடிக்கை எடுத்தோம். தமிழக மீனவர்களின் நலன்களை காக்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடே இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சோனியா பேசினார்.

கூட்டத்தில், மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூட்டணி கட்சித் தலைவர்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக, கூட்டணி சார்பில் போட்டியிடும் சென்னை, புறநகர் தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

சோனியா கூட்டத்தில் ரகளை ஒருவருக்கு அடி - உதை *சென்னை தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசிக் கொண்டிருந்தார். நிருபர்களின் காலரியில் நின்று கொண்டிருந்த கேமராமேன் மற்றும் போட்டோகிராபர்களை உட்காரும்படி காங்கிரஸ் தொண்டர்கள் குரல் எழுப்பினர். அப்போது நிருபர்கள் காலரிக்குள் அத்துமீறி நுழைந்த தொண்டர் ஒருவர், தனியார் "டிவி' கேமராமேனிடம் வாய் தகராறில் ஈடுபட்டார்.
நிருபர்களை செய்தி சேகரிக்க விடாமல் அந்த தொண்டர் இடையூறு செய்து கொண்டிருந்தார். திடீரென அந்த தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் சிலர் ஓடி வந்து, அந்த தொண்டரை அங்கிருந்து செல்லும்படி கூறினார்.
ஆனால், போலீசாரிடமும் அந்த தொண்டர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசார் தங்களது பாணியில் அந்த தொண்டரை தூக்கிச் சென்றனர். இச்சம்பவத்தினால் கூட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
*மாலை 4 மணி அளவில், தீவுத்திடலில் தொண்டர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தொண்டர்கள் குவியத்துவங்கிய பின், கூட்டம் அதிகரித்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
*நேரம் குறைவு காரணமாக, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
*முதல்வர் கருணாநிதி பேசும் போது, மத்திய அரசுக்கு அவர் வைத்த கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளுக்கு மட்டும் சோனியா பதிலளித்து பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts