background img

புதிய வரவு

வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டத்தொடர், ஏப்., 21 வரை நடக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


வரும் 21ம் தேதி, பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை, இம்மாதம் 25ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிப்ரவரி 28ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.பொதுவாக, மே மாதம் முதல் வாரம் வரை லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி முடிவடையும் வகையில் தேதிகள் முடிவாகியுள்ளன.


இதற்கிடையே, கடந்த வருடம் லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து கொள்ள பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஆண்டு லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வரும் 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இருப்பினும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது நிலையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகவே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை விரும்புகிறது.


பா.ஜ., கருத்து: "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு இணங்காததால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியது.பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது குறித்து வரும் 8ம் தேதி, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டம் நாளை (இன்று) நடக்கும்.ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில், தாமஸ் மீதான பாமாயில் வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இந்த பிரச்னை கோர்ட்டில் உள்ளது.எதிர்க்கட்சிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts