தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைகள் மூலம் போலியோ நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு வரும் 23 ஆம் தேதியும், பிப்ரவரி 27ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது.
23 ஆம் தேதி நடைபெறும் முகாமில் தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசு, மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், இரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த சொட்டு மருந்து முகாமில் சொட்டு மருந்து வழங்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்ள குழந்தையின் விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது.
விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் சொட்டு மருந்து கொடுக்கும் பணியை வரும் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மேற்கொள்கின்றனர்.
சென்னை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment