background img

புதிய வரவு

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுக: ஐ.நா.மனித உரிமை ஆய்வாளர்


ஜம்மு - காஷ்மீர், நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆய்வாளரும் சிறப்பு அறிக்கையாளருமான மார்கரெட் சேகாக்கியா கூறியுள்ளார்.

இந்தியா வந்து கடந்த 10 நாட்களாக ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள், குஜராத், மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரிவாக பயணம் செய்த மார்கரெட் சேகாக்கியா, நேற்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரிலும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் மனித உரிமை நிலை கவலையளிக்கிறது என்றும், அம்மாநிலங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியன மனித உரிமை பாதுகாவலர்களின் செயல்பாட்டை முடக்குவதாகவும், அவர்களை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தான் ஒப்புக்கொண்டாலும், தேச அளவிலும், பல மாநிலங்களிலும் பாதுகாப்புப் படைகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மனித உரிமை நிலைகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

“ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும் (Armed forces special powers act - AFSPA), பொது பாதுகாப்புச் சட்டமும் (Public Safety act - PSA) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்கள் மனித உரிமை காப்பாளர்களின் செயல்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகியுள்ளது” என்று கூறிய சேகாக்கியா, “தேச மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் செயல்பாட்டை மத்திய அரசு மறுபிரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய நாட்டின் அடித்தள மக்களாக உள்ள தலித், பழங்குடியினர், மத சிறுபான்மையினர், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோரின் நலனை காக்க முன்வரும் மனித உரிமை காப்பாளர்களின் நிலை ஆபத்திற்குள்ளாகியுள்ளது என்றும் சேகாக்கியா கூறியுள்ளார்.“அடித்தட்டு மக்களுக்காக போராடும் மனித உரிமை காப்பாளர்களை நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேச எதிரிகள், இரகிச நடவடிக்கையாளர்கள் என்றெல்லாம் ‘முத்திரை குத்துவது’ கவலையளிப்பதாக சேகாக்கியா கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் தான் பயணம் செய்தபோது, தங்களுடைய பிள்ளைகள் காணாமல் போனது குறித்து ஏராளமானோர் புகார் தெரிவித்ததாகக் கூறிய சேகாக்கியா, அடிப்படை சுதந்திரத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய பலர் கொல்லப்பட்டது, கைது செய்து சிறையில் நீண்ட காலம் வைத்தது, பொய் வழக்கு போட்டது, சித்ரவதை செய்தது போன்ற பல புகார்கள் தன்னிடம் அளிக்கப்பட்டதாகக் கூறிய சேகாக்கியா, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவும் உரிமை போராளிகளும் சமீப காலமாக அச்சுறுத்தலிற்கு ஆளாக்கப்படுதாகவும் தன்னிடம் புகார்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள சித்ரவதை தடுப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சேகாக்கியா, இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கீழ்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளார்.

௧. மனித உரிமை காப்பாளர்களுக்கு உறுதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களின் பணி அவசியமானது என்பதை பிரதமரும், மாநில அரசுகளும் அங்கீகரிக்க வேண்டும்.

௨. தேச மனித உரிமை ஆணையத்தின் பணி குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

௩. மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

௪. அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காக செயல்பட்டுவரும் மனித உரிமையாளர்களை மதித்து நடக்குமாறு பாதுகாப்பு படைகளுக்கு அறிவுரை கூற வேண்டும்.

௫. மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடததப்பட வேண்டும்.

௬. பெண்களுக்கு சம உரிமை மறுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இந்தியாவில் மனித உரிமை தொடர்பான தனது அறிக்கையை அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்கு அளிக்கவுள்ளதாக சேகாக்கியா தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts