background img

புதிய வரவு

அணு உலைகளைக் குளிர்விக்க ஜப்பான் தீவிரம்

புகுஷிமா,டோக்கியோ, மார்ச் 17: ஜப்பானின் புகுஷிமா நகர அணு உலைகளைக் குளிர்விக்க தீவிர நடவடிக்கைகளை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது.
சி.எச்.47 ரக ராட்சத ராணுவ ஹெலிகாப்டர்கள் டன் கணக்கில் கடல் தண்ணீரை மொண்டு மொண்டு அணு உலைகள் மீது மழை போல கொட்டி குளிர்விக்கப் பார்க்கின்றன. இந்த வேலையை புதன்கிழமை மேற்கொள்ள முடியாதபடிக்கு அந்தப் பகுதி முழுக்க கதிர்வீச்சு அளவு அதிகமாக இருந்தது. இப்போது சற்று தணிந்திருப்பதால் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகள் உயிரைத் துச்சமாக மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம், அணு உலையிலிருந்து கதிர் வீச்சு இருக்கிறதா, அந்த அளவு எவ்வளவு என்று இன்னொரு ஹெலிகாப்டரிலிருந்து ஒரு பைலட் அளந்து பார்த்தார்.
இதற்கிடையே தரையிலிருந்தபடியே அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க டோக்கியோ போலீஸ் படையினர் அந்தப் பகுதியிலிருந்த இடிபாடுகளையும் சேறுகளையும் அகற்றி பாதை ஏற்படுத்தித் தந்துள்ளனர். எனவே தண்ணீர் லாரிகள் மூலம் அதிக நீரை நேரடியாகவே வாரி இறைத்து குளிர்விக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
புகுஷிமா அணு மின்சார நிலையத்தின் எண் 3, எண் 4 அணு உலைகளில் உள்ள குளிர்விப்பான்கள் செயல்படவில்லை. எனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் தண்டுகள் வெப்பமடைந்து உருகியிருக்கும் கட்டடத்திலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அணு மின் நிலையத்தின் 6 அணு உலைகளையும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் போடப்பட்டிருக்கும் தண்ணீர் தடாகத்திலிருந்து கதிர்வீச்சு இருக்கக்கூடும் என்பதால் அவற்றையும் ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
40 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்பட்டாலே அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் வற்றி தண்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிடும், அவ பிறகு சூடேறி காய்ந்து உருகிவிடும். அதன் பிறகு கதிர் வீச்சு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எண் 4 அணு உலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க அமெரிக்க விமானப்படை ஆளற்ற ஹாக் ரக விமானத்தைப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறது என்று ஜப்பானிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நில நடுக்கம் ஏற்பட்டவுடனேயே எண் 1, எண் 2, எண் 3 ஆகிய அணு உலைகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. ஆனால் சுனாமி காரணமாக அவற்றைக் குளிர்விக்கும் சாதனம் செயல்படாமல் நின்றுவிட்டது. பயன்படுத்தப்பட்ட அணு உலை எரிபொருள் தண்டுகளில் 70% எண் 1 அணு உûலையிலும், 33% எண் 2 அணு உலையிலும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
எண் 5 அணு உலையின் அணு எரிபொருள் தடாகத்தில் தண்ணீர் மட்டம் வற்றிவிட்டது. எனவே தண்டுகள் சூடேறி கதிர் வீச்சு பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எண் 4 எண் 5 எண் 6 ஆகிய அணு உலைகளில் எரிபொருள் தண்டுகள் வழக்கமான சோதனைகளுக்காக அப்போது வெளியே எடுக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்கள்: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,650 என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதில் இறந்தவர்கள் 5,321, காணாமல் போனவர்கள் 9,329. காயம் அடைந்தவர்கள் 2,383.
முழு வீச்சில் சீரமைப்பு: சுனாமி காரணமாக ஐவாதே மாகாணத்தின் ரிகுசென்டாகடா நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு வீதியில் விழுந்துகிடந்த கட்டட இடிபாடுகளும் குப்பைகளும் சேறும், கடல் கழிவுகளும் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது. மீட்பு, நிவாரண வாகனங்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் இப்போது எளிதாகப் போய்வர முடியும்.
இப்போதைய உடனடி தேவை எரிபொருள்தான். தொழில் நிறுவனங்களுக்கு மின்சார சப்ளையை மீண்டும் அளித்து உற்பத்தியைத் தொடங்க தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஜப்பானிய மக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கடல் நீர் உள்ளே புகுந்ததால் மோசமாக பாதிக்கப்பட்ட செண்டாய் நகர விமான நிலையத்தில் அவசரத்துக்கு விமானங்கள் வந்து இறங்கும் அளவுக்கு ஓடுபாதையைச் சீரமைத்துவிட்டார்கள். விமானப் போக்குவரத்துக்கான கருவிகளைப் பழுது நீக்கி சீர்படுத்திவிட்டார்கள். போலீஸ், ராணுவ விமானங்கள் வரத் தொடங்கிவிட்டன. வெகு விரைவிலேயே பயணிகள் போக்குவரத்து தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செண்டாய் - மோரிஓகா, மோரிஓகா - ஆமோரி இடையில் எக்ஸ்பிரஸ் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது.
தோஹோகு பிராந்தியத்தில் சுனாமி, நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களுக்கு இடையேயும் இப்போது போக்குவரத்து இணைப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தரை வழியே கார்கள், லாரிகள்,பஸ்கள் செல்ல முடியும்.
பள்ளிகள் திறப்பு: ஐவாதே மாநிலத்தின் ஒபுனாடோ நகரில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சுமார் 250 மாணவர்கள் நடந்தோ, சைக்கிள்களிலோ வந்து சேர்ந்தனர்.
நண்பனைக் கண்டேன்: ஆயுமி உராஷிமா (16) என்ற மாணவன் கியாடோ செய்தி நிலையத்துக்கு பேட்டி தந்தார். ""பள்ளிக்கூடத்துக்கு வரும் வழியில் என்னுடைய நண்பர்களில் ஒருவனைப் பார்த்தேன். கடந்த 5 நாள்களாக அவர்களில் ஒருவரைக்கூட
பார்க்க முடியாமல் இருந்த நான், அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.
சக்ரவர்த்தி உரை: தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே ஜப்பானிய சக்ரவர்த்தி அகிஹிடோ (புதன்கிழமை) இரவு உரையாற்றினார். "நிலநடுக்கம், சுனாமியால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது தாங்க முடியாத வேதனையை அளித்திருக்கிறது. துக்ககரமான இந்த வேளையில் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து இந்தத் துயரத்திலிருந்து மீளவேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
அமெரிக்கா எச்சரிக்கை: ஜப்பானில் அணு உலைகள் இருக்கும் பகுதியிலிருந்து 50 மைல் தொலைவுக்கு அப்பால் போய்விடும்படி தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்பட்ட சுனாமியால் பாதிப்புக்கு உள்ளான சென்டாய்
நகர விமான தளத்தில் மீட்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டு வர உதவும்படியாக சீரமைக்கப்பட்டுள்ள ஒரு ஓடுதளம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts