background img

புதிய வரவு

சாதனைகள் செய்ததாக கூறும் தி.மு.க., ஓட்டுக்கு பணத்தை கொடுப்பது ஏன்? விஜயகாந்த்

ரிஷிவந்தியம்: ""சேராமல் இருப்பது கலைஞரும், உண்மையும், சேர்ந்தே இருப்பது கலைஞரும், களவாணித்தனமும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயகாந்த் நேற்று 3ம் நாளாக பிரசாரம் செய்தார். மாடாம்பூண்டி கூட்ரோட்டில் பிரசாரத்தை துவக்கினார். அருதங்குடி, கூவனூர், எடையூர், தகடி, முடியனூர், வீரட்டகரம், கீழத்தாழனூர், அரும்பாக்கம், துரிஞ்சிப்பட்டு, முருக்கம்பாடி உட்பட பல இடங்களில் அவர் பேசியதாவது:ரிஷிவந்தியம் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. அதிக கிராமங்களை கொண்ட இத்தொகுதியை, முன்மாதிரி தொகுதியாக்கவே தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் சாலை, பஸ் வசதி இல்லை. அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். எனக்கு தொண்டை சரி இல்லாமல் உள்ளது. அதனால், சரியாக பேச முடியவில்லை. டாக்டர், ஓய்வு எடுக்கக் கூறியும் உங்களுக்காக வந்துள்ளேன்.சேராமல் இருப்பது கலைஞரும், உண்மையும், சேர்ந்தே இருப்பது கலைஞரும், களவாணித்தனமும். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை.

அலை வீசுகிறது என, ராமதாஸ் கூறி வருகிறார். எந்த அலையும் வீசவில்லை. அனல் தான் வீசுகிறது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சாதனைகள் செய்துள்ளதாக கூறுகிறீர்கள். பிறகு ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறீர்கள். எனக்கு வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் என்றார்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோகனை ஆதரித்து, சங்கராபுரம் கடைவீதியில் நேற்று காலை அவர் பேசியதாவது:"கரும்பு தோட்டத்திற்கு யானை காவல்' என்ற பழமொழிற்கு ஏற்ப, தமிழக மக்கள் கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினர். அவரும், அவரது அமைச்சர்களும் கோடி, கோடியாக கொள்ளையடித்தனரே தவிர மக்களுக்கான எந்த உருப்படியான திட்டத்தையும் ஐந்தாண்டில் செய்யவில்லை. கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் உங்களுக்கு தர வருவார்கள். பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அதிக நேரம் உங்களுடன் பேச முடியாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத கருணாநிதிக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மக்கள் வரவேற்பால் திணறிய விஜயகாந்த்: விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரண்டாவது நாள் பிரசாரத்தை பிரம்மகுண்டத்தில் துவக்கினார். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஆதரவு திரட்டிய அவர், மதியம் 12.30 மணிக்கு பகண்டை கூட்ரோட்டில் பேசினார். பின், மையனூர் கிராமத்திற்கு சென்றதும், கடுமையான தொண்டை வலி ஏற்பட்டதால் பிரசாரம் செய்யாமல் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.விஜயகாந்த் வருவார் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், அவர்கள் ஆத்திரமடைந்து கொடிகளை கிழித்தெறிந்தனர். விஜயகாந்த் வந்ததால் தான் "கேப்டன் டிவி'யின் வாகனத்தை விடுவிப்போம் எனக்கூறி, பழையசிறுவங்கூர் மக்கள் சிறைபிடித்தனர். இதற்கிடையில், மாநில நிர்வாகிகள் மக்களிடையே பேசி, மீண்டும் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என சமரசம் செய்ததால், வாகனத்தை விடுவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், மாலை 4.30 மணிக்கு பல்லகச்சேரியில் "சைகை' மூலம் பிரசாரத்தை துவக்கினார். அவர் சார்பில் கட்சி பிரமுகர் ஒருவர், மைக்கில் பேசியபடி வந்தார். விஜயகாந்தால் பேச முடியாததால், இரு கைகளாலும் சைகை காட்டி ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து சூளாங்குறிச்சி, பழையசிறுவங்கூர், பாலப்பட்டு, நூரோலை, லா.கூடலூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். மக்கள், கிராமங்களில் காத்திருந்து விஜயகாந்தை வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்பமரியாதை அளித்தனர். தொண்டர்கள் வாணவேடிக்கைகள் நிகழ்த்தினர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts